குமரியில் தொடரும் கடல் சீற்றம்- 5 படகுகள் சேதம், 4 படகுகள் மாயம்
புதுக்கடை: குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றத்தால் 5 படகுகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடநத சில தினங்களாக பெரும்பாலான பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் எழும் இராட்சத அலைகளால் ஊருக்குள் தண்ணீர் புகுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தேங்காபட்டணம் பகுதியில் முள்ளூர்துறை, இராமன் துறை, இனயம் உள்ளி்ட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதம் இந்த பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படுவதை தடுக்க அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் முள்ளூர் துறை பகுதியில் உள்ள அறையன் தோப்பில் மட்டும் சுமார் 50 மீ்ட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேங்காபட்டணம் கடல் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் சேதம் அடைந்தன. 4 படகுகள் மாயமாகின. தொடர்ந்து அறையன் தோப்பு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்படாத பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதியடைந்தனர்.
தொடர்ந்து நேற்று அலையின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் மீனவர்கள் அச்சத்துடன் வீடுகளில் தங்காமல் மேடான பகுதியிலும், தேவாலங்களிலும் தங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications