கூட்டணி விஷயத்தில் தங்கபாலு இரட்டை வேடம்: இதயதுல்லா
மதுரை: கூட்டணி விஷயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இரட்டை வேடம் போடுவதாக, சீரமைப்புக் குழு துணை அமைப்பாளர் இதயதுல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
சீரமைப்புக் குழு துணை அமைப்பாளர் இதயதுல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
சீரமைப்புக் குழு அமைப்பாளர் வடிவேலு, மாநிலச் செயலாளர் ஜோதி ராமலிங்கம், என்னையும் (இதயதுல்லா) நீக்குவதாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை போலியானது. சட்டசபைத் தேர்தலின் போது, வேட்பு மனுவில் பொய் தகவல்களைத் தெரிவித்ததாக, தங்கபாலு மீது தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியது.
தமிழக காங்கிரஸ் கட்சியில், 80 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்ததாக, தங்கபாலு கூறுகிறார். அந்த அளவுக்கு உறுப்பினர்களைச் சேர்த்திருந்தால், காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எங்களை சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழையக்கூடாது என, தங்கபாலு உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆகஸ்ட் 9ம் தேசிய தியாகிகள் தினத்தில், வடிவேலு தலைமையில் அங்கு செல்வோம். எங்களை அவரால் மட்டும் அல்ல யாராலும் தடுக்க முடியாது.
கல்லூரி மற்றும் மலைவாழ் மக்களுக்குச் சொந்தமான, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தங்கபாலு அபகரித்துள்ளதாக, குற்றச்சாட்டு உள்ளது. அதிலிருந்து தப்பிக்க, அவர் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவது போல், நாடகமாடுகின்றார்.
வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பியதில், அவர் மீது பல கிரிமினல் வழக்குகள், எம்.ஜி.ஆர். ஆட்சியில் போடப்பட்டன. கூட்டணி விஷயத்திலும் தங்கபாலு, இரட்டை வேஷம் போடுகிறார். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு இதயதுல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications