நானோ பில்டரிங் டெக்னாலாஜி திருப்பூருக்கு தேவையில்லை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
திருப்பூர்: சாயக்கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்றும் வகையில், நானோ பில்டரிங் டெக்னாலாஜி, திருப்பூருக்கு தேவையில்லை என்று சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு துறை செயலாளரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான (பொறுப்பு) சங்கர் கருத்து தெரிவி்த்துள்ளார்.
சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு துறை செயலாளரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான(பொறுப்பு) சங்கர், திருப்பூர் அருள்புரத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட பின், கூறியதாவது:
திருப்பூர் அருள்புரத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தை பிரைன் சொல்யூசன் தொழில்நுட்பம் பயன்படுத்தி, சோதனை முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த முறையில், எவாப்லேட்டர் முறையாக இயங்காததால் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
சாய கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்றும் வகையில், நானோ பில்டரிங் டெக்னாலாஜி எனும் தொழில்நுட்பத்தை குஜராத் சென்று பார்வையிட்டோம். அந்த திட்டம் சிறப்பாக உள்ளது. ஆனால் நானோ டெக்னாலஜி தேவையில்லை. ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை செயலாக்கும் பட்சத்தில், அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் சாய ஆலைகள் மீண்டும் இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
திருப்பூரில், சாயக்கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்ற 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கும் என அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எந்த தொழில் நுட்பத்தின் மூலம் சுத்திகரிப்பு செய்வது, அதற்கு எவ்வளவு செலவாகும் என சுத்திகரிப்பு நிலையங்கள் மதிப்பீடு தயார் செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு இது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு சங்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications