நிலமோசடி வழக்கு- கரூர் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளரின் கணவர், தம்பி கைது
கரூர் தளவாபாளையம் பகுதியை சேர்ந்த, மணி என்பவரது மனைவி பார்வதியின் நிலத்தை மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்வதி என்பவர் கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
தளவாபாளையம் பகுதியில் வசித்து வரும் எனக்கு, விவசாய நிலம் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதே பகுதியில், மறைந்த தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுகியின் கணவர் முருகேசனுக்கும், நிலம் உள்ளது.
பாப்புலர் முதலியார் வாய்க்காலில் இருந்து, முருகேசன் நிலத்துக்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு, எனது நிலம் தடையாக இருந்தது. இதையடுத்து கடந்த 2007 ஜூலை 16 ம் தேதி 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 71 சென்ட் நிலத்தை, வாசுகியின் கணவர் முருகேசன் மற்றும் வாசுகியின் தம்பியும், தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான ரவிக்குமார் உள்ளி்ட்ட சிலர் ஒரு லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்து, மீதி பணத்தை பிறகு தருவதாக கூறி, மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டனர்.
மீதிப் பணத்தை கேட்டதற்கு, என்னிடமே பணம் கேட்கின்றாயா கஞ்சா வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்று என்னை மிரட்டினர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்த கரூர் எஸ்.பி. நாகராஜன் உத்தரவிட்டார். போலீஸ் விசாரணையில் இந்த புகார் உண்மை என தெரிந்தது. இதையடுத்து, வாசுகியின் கணவர் முருகேசன் மற்றும் வாசுகியின் தம்பியும், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான ரவிக்குமார் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் திமுக நிர்வாகிகள் கைதாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. மேலும் சிலர் கைதாகலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.