காமன்வெல்த் போட்டி ஊழலுக்காக ஆட்சியாளர்களின் தலைகள் உருளட்டும்- அருண் ஜேட்லி ஆவேசப் பேச்சு

காமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்து இன்றும் நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பியது.
இரு அவைகளும் காலையில் கூடியதும் பாஜகவினர் போராட்டத்தில் குதித்ததால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் கூடி விவாதம் நடந்து வருகிறது.
முன்னதாக 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா 12 மணிக்குக் கூடியபோது ஊழல் புகார்கள் குறித்த விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அருண் ஜேட்லி பேசியபோது, சுரேஷ் கல்மாடியை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதுதான் காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவராக நியமித்தனர் என்று பச்சைப் பொய்யை பேசியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேக்கான். இது கடும் கண்டனத்துக்குரியது.
இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. கல்மாடி நியமனம் தொடர்பாக தன் மீதான களங்கத்தை தள்ளி விடப் பார்க்கிறது காங்கிரஸ். காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான அனைத்தையும் மறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.
காமன்வெல்த் போட்டி ஊழல் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. இதில் பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்களை எல்லாம் காப்பாற்றப் பார்க்கிறது காங்கிரஸ். இந்த ஊழலுக்காக யாருடைய தலையாவது உருள வேண்டுமானால் அது ஆட்சியாளர்களின் தலைகளாகத்தான் இருக்கும்.
நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலைக் கூறி திசை திருப்பப் பார்க்கிறார் மேக்கான். பிரதமர் அலுவலகம்தான் கல்மாடியை நியமித்தது. பிரதமருக்கு இது தெரிந்தே நடந்துள்ளது. இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர் அமைதி காக்கிறார். ஏன் இந்த அமைதி என்பதை அவர்தான் விளக்க வேண்டும். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications