தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் இல்லை: ஜெயலலிதா
சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலே இல்லை என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் அதிமுக அரசை பாராட்டி தேமுதிக உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
அதிமுக அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்க பெருமையாக உள்ளது.
ஆனால் கடந்த திமுக ஆட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கூட அரசு உதவிகள் கிடைக்கவில்லை. அவர்கள் தயார் செய்திருந்த பட்டியலில் பெயர் இருந்தவர்களுக்கு மட்டும் தான் உதவித் தொகை வழங்கினர் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறுகையில்,
தமிழ்நாட்டைப் பொருத்த வரை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற பட்டியலே இல்லை என்பது தான் உண்மை. பிற மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலை, வறுமை மேல் உள்ளவர்களுக்கு ஒரு விலை என்ற நிலை உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரே விலை தான். மேலும், அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசோ வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலே தயாரிக்கப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications