செல்லப்பிள்ளை ஓ.பி. கேட்டால் எல்லாம் நடக்கிறதே!- சட்டசபையில் ஏக்கம் தெரிவித்த சிபிஎம் உறுப்பினர்
சென்னை: அம்மாவின் செல்லப்பிள்ளை ஓ.பன்னீர் செல்வம். அவர் கேட்டால் எல்லாம் நடக்கிறது என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கூறியதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது. அதற்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதிலும், அந்தப் பதிலில் முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு திருத்தம் செய்ததும் மேலும் கலகலப்பைக் கூட்டியது.
என்றும் நான்தான் பொதுச் செயலாளர்
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பெரியகுளம் தொகுதி சிபிஎம் உறுப்பினர் லாசர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், எனது வெற்றிக்காக உழைத்த அ.தி.மு.க.வின் அன்றைய பொதுச்செயலாளரும் இன்றைய முதல் அமைச்சருமான... என்று தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர்,
உறுப்பினரின் கன்னி பேச்சில் குறுக்கிடக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும் அவர் சொன்னதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு அன்றைக்கும் நான் பொதுச்செயலாளர். இன்றைக்கும் நான்தான் பொதுச்செயலளார். நான் இருக்கிறவரை அ.தி.மு.க.வுக்கு நான்தான் பொதுச்செயலளார். அதன் பிறகுதான் முதல்வர் என்றார்.
பின்னர் தொடர்ந்து லாசர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது சொந்த ஊரான போடிநாயக்கனூரிலிருந்து இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். அவரது ஊரான பெரியகுளத்தில் இருந்து நான் போட்டியிட்டு வென்றுள்ளேன்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயிறு வலிக்கும்
நிதிநிலை அறிக்கையில் அவரது தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் செல்லப் பிள்ளையான அவரை நான் ஏமாற்றத்துடன் பார்த்தால், அவருக்கு வயிற்று வலி ஏற்படும்.
எனவே, எனது தொகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரியை அமைத்துத் தர வேண்டும் என்றார்.
முதல்வரின் செல்லப்பிள்ளை என்று லாசர் கூறியதால் சீட்டில் உட்கார முடியாமல் நெளிந்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் லாசரின் பேச்சின்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், நான் அம்மாவின் செல்லப் பிள்ளை என உறுப்பினர் லாசர் கூறினார். நான் மட்டுமல், தமிழகத்தில் அதிமுகவில் உள்ள ஒரு கோடி பேரும் முதல்வருக்கு செல்லப்பிள்ளைகள் தான் என்றார்.
ஒன்று இல்லை, ஒன்றரை!
இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பன்னீர் செல்வத்தை அழைத்தார். அவரிடம், ஒரு கோடி அதிமுகவினர் அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினர் என்று பன்னீர்செல்வம் சொல்லியதைத் திருத்தினார். இதையடுத்து மீண்டும் மைக்குக்கு வந்த பன்னீர்செல்வம், மன்னிக்கவும், ஒரு கோடி அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினரும் செல்லப்பிள்ளைகள்தான் என்று கூற அவையில் 'கொல்'லென்று சிரிப்பொலி எழுந்து அடங்கியது.












Click it and Unblock the Notifications