இப்ப, நாங்க தெளிவாயிட்டோம்: ராமதாஸ் சொல்கிறார்
செங்கல்பட்டு: இன்று, நாம் தெளிவு பெற்று தன்னிச்சையாகக் கட்சியை வளர்க்க, முடிவு செய்து விட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம், கூடுவாஞ்சேரியில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ்,
உள்ளாட்சித் தேர்தலில், நம் கட்சி தனித்துப் போட்டியிடுவதை, தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். திராவிட கட்சிகளான திமுக, அதிமுக கரைந்து வருகின்றன. எந்தக் கட்சியையும் நம்பி பாமக துவக்கப்படவில்லை. மக்களை நம்பி துவக்கினோம்.
இனி திமுகவையும், அதிமுகவையும் நம்பி பயனில்லை. வானில் மேகமும், கடலில் நீரும் இருக்கும் வரை, திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தால், நாம் முதல்வராக முடியாது.
தமிழக முதல்வர் ஆடு, மாடு கொடுக்கிறேன் என்கிறார். இவ்வாறு செய்தால், படிப்பறிவு இல்லாத
நாடாக, தமிழகம் மாறிவிடும். ஏற்கனவே, தமிழகத்தில் தாலி இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்கள் குடித்துவிட்டு, குறுகிய வயதில் இறப்பதே இதற்குக் காரணம்.
பென்னாகரம் இடைத்தேர்தலில், திமுக ரூ. 75 ஆயிரம் கோடியை இறைத்து வெற்றி பெற்றது. பாமக 42,000 ஓட்டுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. அதே தொகுதியில், தற்போது நடந்த சட்டசபைத் தேர்தலில், திமுக டெபாசிட்டை இழந்துள்ளது.
நாம் ஆட்சிக்கு வந்தால், நகரத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள், மீண்டும் கிராமத்திற்கே திரும்பும் நிலைமை வரும். இன்று, நாம் தெளிவு பெற்று தன்னிச்சையாகக் கட்சியை வளர்க்க, முடிவு செய்து விட்டோம்.
உள்ளாட்சித் தேர்தலில், நம் கட்சியினர் யார் போட்டியிட்டாலும், ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். ஒரு ரூபாய் கூட செலவு செய்யக்கூடாது. பூத் செலவு கூட கேட்கக்கூடாது என்றார்.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. அதில் பேசிய ராமதாஸ், திராவிட கட்சிகளோடு கூட்டணி சேர்ந்ததற்கும், அவர்களை ஆட்சியில் அமரவைத்ததற்கும் தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
பாமக தனித்து போட்டியிடும் என்ற முடிவை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவில் உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். பாமக இருக்கும் காலம் வரை தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுடன் கூட்டணி வைப்போம்.
நமக்கு ஆளும் தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கும் தகுதி கிடையாது. தமிழ்நாடு தாழ்ந்து கிடக்கிறது, தமிழ் மொழி வளர்ச்சி இல்லை, தமிழ் இனம் சீர்கெட்டு கிடக்கிறது. குடிக்கும் பழக்கம்தான் வளர்ந்துள்ளது.
தரமான, இலவச சமச்சீர் கல்வியை இதுவரை கொடுக்காததற்கு மன்னிப்பு கேட்பார்களா, மருத்துவ சிகிச்சையில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருப்பதற்கு மன்னிப்பு கேட்பார்களா, எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் தொழில். விவசாயி வாழ வழி இல்லை.
டி.வி, சினிமா மூலம் தமிழ் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக கெடுத்து விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும். அப்போது நானே 5 கடைகளை அடித்து நொறுக்குவேன் என்றார்.












Click it and Unblock the Notifications