சேலம் நில அபகரிப்பு: 'கண்ணாமூச்சி காட்டிய' இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சரண்
சேலம்: சேலம் நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன் இன்று போலீசில் சரணடைந்தார்.
சேலம் அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீது புகார் செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகள் தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் சேலம் போலீசில் சரணடைந்தார். போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்ட அவர் வேறு ஒரு நில அபகரிப்புப் புகாரில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த 2 வழக்குகளிலும் போலீசாரால் தேடப்பட்ட இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஆடிட்டர் துரைசாமி, துரைசாமி ஆகியோர் தலைமறைவாயினர். அவர்களுக்கு முன் ஜாமீன் அளித்த சென்னை உயர் நீதிமனறம், 3 பேரும் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும் என்றும் 3 நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை 3 பேரும் சேலம் குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் லட்சுமணன்காலை 7-30 மணிக்குசேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். ஆடிட்டர் துரைசாமி, துரைசாமி ஆகியோர் 8 மணிக்கு வந்தனர். 3 பேரும் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
லட்சுமணனிடம் சேலம் குற்றப்பிரிவு துணைக் கமிஷனர் விசாரணை நடத்தினார். ஆடிட்டர் துரைசாமியிடம் சேலம் தெற்கு பிரிவு உதவிக் கமிஷனர் சுப்பிரமணியமும், துரைசாமியிடம் உதவிக் கமிஷனர் பெரியசாமியும் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து 3 நாட்கள் அவர்களிடம் விசாரணை நடக்கும். இந்த விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்று மாலை விசாரணை முடிந்ததும் இவர்கள் 3 பேரும் போலீஸ் நிலையத்திலேயே தங்க வைக்கப்படுவர்.
வீரபாண்டி ஆறுமுகத்தை அப்பா என்றே அழைப்பார் லட்சுமணன். அந்த அளவுக்கு அவரிடம் நெருக்கமாக இருந்த லட்சுமணன் சேலத்தில் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டப் பஞ்சாயத்துக்கும் பேர் போன இவர் தன்னை விட மூத்த அதிகாரிகளையே மிரட்டி, உருட்டி வந்தவர். பல உயர் காவல்துறை அதிகாரிகளை இவர் நினைத்த இடத்துக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
இதற்கிடையே அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் போலீஸார் தேடி வந்த சேலம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஜிம் ராமு நேற்று சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தினமும் காலை 8 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர் இன்று காலை சேலம் போலீஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து போட்டார்.












Click it and Unblock the Notifications