தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்ஸாண்டர் மரணம்- ராஜிவை பிரதமராக்கியவர்!
இந்திரா காந்தியின் தனிச் செயலாளராக பணியாற்றிய பி.சி.அலெக்ஸாண்டர் அவரிடம் பெரும் செல்வாக்குடன் இருந்தார். இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியில், பலரும் பிரதமர் பதவிக்கு முட்டி மோதிக் கொண்டிருந்தபோது ராஜிவ் காந்தியை பிரதமராக்கியவர்களில் முக்கியமானவர் அலெக்ஸாண்டர்.
ராஜிவ் பிரதமராக அவரது மனைவி சோனியா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்தி, ராஜிவை பிரதமராக்கியவர் அலெக்ஸாண்டர்.
பி.சி.அலெக்ஸாண்டர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 90. அவருக்கு அக்கம்மா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
பதிஞ்சரெதலகல் செரியன் அலெக்சாண்டர் எனப்படும் பி.சி.அலெக்ஸாண்டர் மத்திய அரசுப் பணியில் இருந்து வந்தவர். பல்வேறு முக்கியப் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.
மத்திய வர்த்தகத்துறை, லண்டனில் தூதர், ஐ.நா. சிறப்புத் தூதர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
எப்படி இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக திகழ்ந்தாரோ அதேபோல ராஜீவ் காந்தியிடமும் நல்ல உறவை பேணிக் காத்தார் அலெக்சாண்டர்.
இதன் பயனாகத்தான் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் பெரும் அரசியல் சூறாவளி வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ராஜீவ் காந்தியால் தமிழக ஆளுநராகப் பணியமர்த்தப்பட்டார் அலெக்சாண்டர்.
தமிழக ஆளுநராக 1988ம் ஆண்டு முதல் 1990 வரை பணியாற்றினார் அலெக்சாண்டர். ஆளுநர் குரானாவை மாற்றிவிட்டு அவருக்குப் பதில் அலெக்சாண்டர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுபட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக சிதறியது அதிமுக. அப்போது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆளுநராக இருந்து தமிழகத்தை மிகச் சிறப்பாக ஆண்டார் அலெக்சாண்டர்.
இவர் ஆளுநராக நீடித்தவரை அதிமுக ஒன்றுபடவே இல்லை. பிரிந்த நிலையிலேயே 1989ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது. திமுக வெற்றி பெற்று, மீண்டும் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கருணாநிதி முதல்வரானார்.
அதன் பின்னர் 1993 முதல் 2002 வரை மகாராஷ்டிர ஆளுநராக அலெக்ஸாண்டர் பணியாற்றினார். 1996 முதல் 98 வரை கோவா மாநில ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பி.சி.அலெக்ஸாண்டர், 2002 முதல் 2008 வரை மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சுயேச்சையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகவும் ஆனார்..
2007ல் பாஜக கூட்டணி ஆட்சியின்போது நடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அலெக்ஸாண்டர் விரும்பினார். ஆனால், அதே சோனியா காந்தி ஏற்கவில்லை. இதையடுத்து சோனியாவையும் காங்கிரஸையும் மிகக் கடுமையாகத் தாக்கி கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அலெக்ஸாண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அதிருப்தி காரணமாக தனது மகாராஷ்டிர கவர்னர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
பல ஆய்வுக் கட்டுரைகளையும் "My Years with Indira Gandhi", "The Perils of Democracy", "India in the New Millennium" உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார் அலெக்ஸாண்டர்.