செங்கோட்டையில் நடந்த தாக்குதல்- லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை உறுதி
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் கடந்த 2000மாவது ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகம்மது ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆரிப். இவன், கடந்த 2000மாவது ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி செங்கோட்டை மீது நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டான்.
அன்றைய தினம் செங்கோட்டைக்குள் புகுந்த தீவிரவாதிகள், ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று ராணுவத்தினர் பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் ஆரிப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை 2007ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து ஆரிப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இன்று அந்த வழக்கில்,ஆரிப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆரிப் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவனது வக்கீல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications