கோவில்களில் அன்னதானம்- முதல்வருக்கு திருவாவடுதுறை ஆதினம் பாராட்டு
கன்னியாகுமரி: தமிழகத்தில் மேலும் 106 கோவில்களில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருவாவடுதுறை ஆதினம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடிகளப் பூஜை நடந்தது. இதன் 8-ம் திருவிழா திருவாவடுதுறை ஆதினம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாவடுதுறை ஆதினம் 23வது குருமா சன்னிதானம் சிவபிரகாச தேசிக பரமாச்சிரய சுவாமிகள் நேற்று கன்னியாகுமரி வந்தார்.
கோவிலில் நடந்த பூஜைகளில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் மேலும் 106 திருக்கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். திருவாவடுதுறை ஆதினம் சார்பில் கன்னியாகுமரி, சுசிந்திரம், ராமேஸ்வரம், மயிலாடுதுறை, திருவையாறு ஆகிய இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரிவோரை கண்டறிந்து அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காசி முதல் கன்னியாகுமரி வரை 96 இடங்களில் உள்ள கோவில்களில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை அடுத்த பறக்கையில் ரூ.7 லட்சம் செலவில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில் கிளை மடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 24-ம் தேதி நடக்கிறது. இந்த கிளை மடத்தை நான் தான் திறந்து வைக்கிறேன்.
பாடசாலை நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். கன்னியாகுமரி வரும் பக்தர்களுக்கு இலவசமாக தங்கும் விடுதி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு துறவிகளும், சாதுக்களும், பக்தர்களும தங்கலாம். அவர்களுக்கு இலவசமாக அன்னதானமும் வழங்கப்படும் என்றார்












Click it and Unblock the Notifications