சாதகமான பதில் கிடைக்கும் கேள்விகளை அனுமதியுங்கள்: சபாநாயகருக்கு முதல்வர் அறிவரை
சென்னை: சாதகமான பதில் சொல்லும் கேள்விகளை அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
சட்டசபையில் நேற்று கேள்வின் நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. கேள்விகள் எழுப்பினர். அப்போது அவர் திருத்துறைப்பூண்டியில் அரசு குடியிருப்புகள் கட்ட அரசு ஆவன செய்யுமா? ஆம் என்றால் எப்போது நடக்கும்? என்று கேட்டார். அதற்கு பதில் அளி்த்த வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் உங்களின் இரண்டு கேள்விகளுக்கும் விடை இல்லை என்றார்.
அப்போது குறிக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது,
உறுப்பினர்களின் கேள்விகளை சம்பந்தப்பட்ட துறை செயலாளாருக்கு அனுப்பி பதில் பெறப்படும். ஒரு அமைச்சர் முதன்முதலாக பதில் அளிக்கையில் சாதகமான பதில் சொல்லும் கேள்விகளை அனுமதிக்க வேண்டும். அமைச்சர் வைத்திலிங்கம் முதன்முதாக பதில் அளித்த இரண்டு கேள்விகளுக்குமே இயலாது, இயலாது என்று கூறினார். அந்த கேள்விகளை அனுமதித்ததால் தவறு சபாநாயகர் மீது தான் என்று வேடிக்கையாகக் கூறினார்.
இனி சாதகமான பதில் கிடைக்கும் கேள்விகளையே அனுமதிப்பதாக சபாநாயகர் ஜெயக்குமார் சிரித்துக் கொண்டே கூறினார்.
அமைச்சர் மறுத்தார்-நிறைவேற்றினார் முதல்வர்
இதேபோல, கிணத்துக்கடவு அதிமுக எம்.எல்.ஏ. செ. தாமோதரன், குறிச்சி நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குறிச்சியில் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்றார்.
அமைச்சர் இல்லை என்று கூறியும் தொடர்ந்து தாமோதரன் பேசுகையில், குறிச்சி நகராட்சியில் 1.25 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களின் நலன் கருதி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றார். அதற்கு அமைச்சர் முனுசாமி பேருந்து நிலையம் அமைக்க வாய்ப்பே இல்லை என்றார். இருப்பினும் தாமோதரன் பிடிவாதமாக தனது கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.
அப்போது குறிக்கிட்ட முதல்வர் உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று குறிச்சி நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications