லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது
குளித்தலை: குளித்தலை அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நெய்தலூர் காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(50). அதே பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் ரைஸ் மில்லுக்கு தனி மின்கம்பம் மற்றும் மின் இணைப்பு பெறுவதற்காக, சின்னப்பனையூர் துணை மின் நிலைய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதை ஆய்வு செய்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணன், சுந்தர்ராஜிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். சுந்தர்ராஜன் முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாயை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணனிடம் கொடுத்துள்ளார்.
மேலும், தனக்கு பணம் வேண்டும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணன் கேட்டுள்ளார். ஆனால் மீண்டும் பணம் கொடுக்க விரும்பாத சுந்தர்ராஜன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதியிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சின்னப்பனையூர் துணை மின் நிலையத்தில் இருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணிடம், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜன் கொடுத்தார்.
அப்போது, அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.அம்பிகாபதி உள்ளிட்ட போலீசார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்பு , திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள நாராயணன் வீட்டில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications