அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் ரெய்ட்: துப்பாக்கி, 100 தோட்டாக்கள் பறிமுதல்
தூத்துக்குடி: திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி கந்தன் காலனி, டூவிபுரத்தில் உள்ள அவரது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு துப்பாக்கியும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை 2 பேர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றனர்.
இந்த வழக்கில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி வெடிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டிவிட்டதால் தான் சசிகுமார் என்னைக் கொல்ல முயன்றார். அதற்கு பழிவாங்கத் தான் அவரைக் கொன்றோம் என்று விசாரணையில் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து குரும்பூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று மாலை அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை தூத்துக்குடி சிப்காட், வைகுண்டம், ஆறுமுகநேரி காவல் நிலையங்களுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். டிஐஜி வரதராஜு, எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கொலை முயற்சி, கூட்டு சதி ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனை வேனில் ஏற்றி நீதிமன்றம் அருகே உள்ள மாஜிஸ்திரேட் பரிதா வீட்டில் ஆஜர்படுத்தினர். அனிதாவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ஆல்நாத்தும் ஆஜர்படுத்தப்பட்டார். இருவரையும் 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் நள்ளிரவு 1 மணிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு இரவு 2 மணி அளவில் திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக போலீஸ் பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில்,
செய்யாத குற்றத்திற்காக சசிகலா தூண்டுதலின் பேரில் தான் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதற்காக நான் அஞ்ச மாட்டேன். எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.
இந்நிலையில் தூத்துக்குடி கந்தன் காலனி, டூவிபுரத்தில் உள்ள அவரது வீடுகளின் இன்று மதியம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு துப்பாக்கியும், 100 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிக்கு அவரிடம் உரிமம் உள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50 தோட்டாக்கள் அதிகமாக வைத்திருந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications