நிலமோசடி புகார்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற கருணாநிதி முயற்சி-ஜி. ராமகிருஷ்ணன்
கோவை: தமிழகத்தில் நிலமோசடி புகார்களில் சிக்கியுள்ள தன்னுடைய சகாக்களை காப்பாற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி முயற்சி செய்வது கண்டனத்திற்குரிய செயல் என்று தமிழ்நாடு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு புகார்கள் தற்போது அதிமுக ஆட்சியில் குவிந்து வருகின்றது. இதனால் தான் தமிழக அரசு நிலமோசடி தடுப்பு தனிப்பிரிவை ஏற்படுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தமிழகத்தில் நிலமோசடி புகாரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நில அபகரிப்பில் தி.மு.க. வினர் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்தால் அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இப்பொழுது தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்குக்கள் பதிவு செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்று தி.மு.க.சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது எதைக் காட்டுகிறது என்றால் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிலமோசடி புகார்களில் சிக்கியுள்ள தன்னுடைய சகாக்களை காப்பாற்றவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது கண்டனத்திற்குரியது ஆகும்.
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அவர்களுக்கு நியாயம் எதுவும் கிடைக்கவில்லை. ராஜபக்சே போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகும் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படாமல் இருப்பது மிகவும் வேதனை தருகின்றது.
கடந்த 2010 ம் ஆண்டு முதல் 10 தடவைகளுக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்து இலங்கை தமிழர்களுக்கு எந்தவித பயனும் இதுவரை கிட்டவில்லை.
எனவே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும், சம உரிமை வழங்கிடக் கோரியும் வரும் செப்டம்பர் 7 ம் தேதி நாடாளுமன்றம் முன்பாக சி.பி.ஐ.(எம்) சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
வரும் ஆகஸ்ட்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா தலைமையில் பொதுவாழ்வில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு உண்மையாக பாடுபடுதல் மற்றும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.
லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்றார்.












Click it and Unblock the Notifications