பத்மநாபசாமி கோவில் நகைகள்: ஆச்சாரம் மீறாமல். பக்தர் மனம் புண்படாமல் மதிப்பிடப்படும்- சுப்ரீம் கோர்ட்
திருவனந்தபுரம்: தேவபிரஸ்னத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ள போதிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நாங்கள் எங்களது பணிகளைச் செய்தாக வேண்டும். எனவே பக்தர்களின் மனம் புண்படாத வகையில், கோவில் ஆச்சாரங்களை மீறாத வகையில் நகைகள் மதிப்பீடு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் நியமித்துள்ள நகை மதிப்பீட்டுக் குழுவின்தலைவர் அனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் நான்கு நாட்களாக நடந்து வந்த தேவபிரஸ்னம் முடிந்தது. அதில், கோவிலின் நகைகளை யாரும் மதிப்பிடக் கூடாது. 6வது அறையைத் திறக்கவே கூடாது. மீறித் திறந்தால் திறந்தவர்களின் வம்சமே பூண்டோடு அழிந்து போய் விடும் என உத்தரவு வந்ததாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தேவபிரஸ்னம் நேற்று நடந்து வந்த அதேசமயம், நகை மதிப்பீட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டமும் ஒரு பக்கம் நடந்தது. அதில் குழுத் தலைவர் அனந்தபோஸ் மற்றும் உறுப்பினர்கள் நம்பிராஜன், வேலாயுதன், விகாஸ்சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆப்ரகாமும் பங்கேற்றார்.
கூட்டத்தில் கோவில் பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. மேலும் நகைகளை மதிப்பிடுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை குழுத் தலைவர் அனந்தபோஸ் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜோதிடர்களின் எச்சரிக்கை குறித்து கருத்து கேட்டபோது அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்தார்.
அவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளப்படி கோவில் நகைகளை நாங்கள் மதிப்பிட வேண்டும். அதற்காக கோவிலின் ஆச்சாரத்தை மீறாமலும், பக்தர்களின் மனம் புண்படாத வகையிலும் நகைகள் மதிப்பிடும் பணி தொடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications