அறிவாலயத்தில் முதல் முறையாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிய திமுக

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதன்முதலாக இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அறிவாலயம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் இன்று காலை 8 மணிக்கு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபப்ட்டது.
இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் க.ராமசந்திரன், பொன். முத்து ராமலிங்கம், மேயர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, சங்கரி நாராயணன், வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், ஆயிரம் விளக்கு உசேன், விஜயாதாயன்பன், தொண்டரணி மாசிலாமணி, பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, ஏகப்பன், கொளத்தூர் ஐ.சி.எஸ்.முரளி, இளைஞரணி வி.எஸ்.ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது,
மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தவரே திமுக தலைவர் கருணாநிதி தான். முதன்முறையாக இன்று அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மரபுப்படி காலை 8 மணிக்கு கொடியேற்றி மரியாதை செய்தோம் என்றார்.
அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளால் தேசிய அரசியலில் இருந்து திமுக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு அவர், தேசிய அரசியலில் இருந்து திமுகவை யாராலும் தனிமைப்படுத்த முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications