ஹஸாரே ஊழல்வாதி, பிறந்த நாளுக்காக அறக்கட்டளைப் பணத்தை சுரண்டியவர்-காங். சாடல்
டெல்லி: ஊழலை ஒழிக்கப் போராடுவதாக கூறும் அன்னா ஹஸாரே ஒரு ஊழல்வாதி. அவருடைய பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து செலவழித்துள்ளனர். இதை ஊழல் என்று நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாளை டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் குதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அன்னா மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியது காங்கிரஸ் கட்சி. அதாவது ஊழல் புகாரை சுமத்தியுள்ளது காங்கிரஸ்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், சிவில் சொசைட்டி என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அன்னா ஹஸாரே குழுவினர் உண்மையில் ஒரு கம்பெனி போலவே நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசி வருகின்றனர். இவர்களுக்குப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இவர்களின் தலைவராக கூறப்படும் ஹஸாரேவே ஊழல் புரிந்தவர்தான். இதை நான் சொல்லவில்லை. நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே அதைக் கூறியுள்ளது. அன்னா ஹஸாரேவின் பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளைப் பணத்தை எடுத்துச் செலவிட்டுள்ளனர். இது ஊழல்தான் என்று நீதிபதி சாவ்ந்த்தே கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல மிரட்டிப் பணம் பறித்தல், நில அபகரிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அன்னா ஹஸாரே மீது உள்ளன. மாவோயிஸ்டுகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பலரும் இவர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கின்றனர். எதற்காக என்பது இவர்கள் சொன்னால்தான் தெரியும்.
இப்படிப்பட்ட அன்னா ஹஸாரேவிடம் நாங்கள் கேட்க விரும்புவது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதுதான். நீங்களே ஊழல் கறை படிந்தவர். இதை எப்படி உங்களால் மறைக்க முடியும் என்றார் திவாரி.












Click it and Unblock the Notifications