சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களுடன் இன்று தான் வகுப்புகள் தொடக்கம்!
சென்னை: தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுவிட்டதையடுத்து இன்று முதல் பெரும்பாலான பள்ளிகளில் முறையான வகுப்புகள் தொடங்கவுள்ளன.
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன், மாநில கல்வி வாரிய பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளில் தனித்தனியாக இருந்த பாடத்திட்டதை ஒரே பாடத்திட்டமாக மாற்ற கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு எல்லா வகையான பள்ளிகளுக்கும் பொதுவாக சமச்சீர் கல்வி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமாக இல்லை என்று கூறி அதை ரத்து செய்தது. இதையடுத்து சட்டப் போராட்டம் நடந்தது. இதனால் கடந்த 2 மாதமாக குழந்தைகள் புத்தகங்களே இல்லாமல் பள்ளிக்கூடங்களுக்கு சும்மா போய் வந்தனர்.
இந் நிலையில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சமச்சீர் கல்வி உடனடியாக அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை பள்ளிக்கூடங்களுக்கு வினியோகிக்கும் பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. கடந்த1 வாரத்தில் மொத்தம் 5 கோடி புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்களோடு ஆசிரியர்களுக்கு ஒரு கையேடும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பாடப்புத்தகங்களில் செம்மொழி மாநாடு பற்றிய செய்திகள், முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பான வரிகள் உள்ளிட்ட பல பக்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், சில பக்கங்கள் கறுப்பு மையால் அடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் நீக்கவேண்டியதை நீக்கியும், ஸ்டிக்கர் கொண்டு ஒட்டி மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் உள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் இந்தப் பணி முடிந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் இன்றுதான் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இதைத்தொடர்ந்து இன்று முதல் அந்த புத்தகங்களை வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications