தமிழக பள்ளிகளில் இந்தி கற்றுத் தர வேண்டும்-இந்தி தேர்வு எழுதிய 64 வயது திமுக தொண்டர் கோரிக்கை
நெல்லை: தமிழகத்தில் இந்தியை எதிர்த்து பெரும் இயக்கமே நடத்திய திமுகவைச் சேர்ந்த 64 வயது தொண்டர் ஒருவர், தமிழக பள்ளிக்கூடங்களில் அரசே இந்தி கற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு தலைமுறையே இந்தி தெரிந்து கொள்ளாமல் போன பெருமையைக் கொண்டது திமுக. இந்தியை எதிர்ப்பதாக கூறி, வட இந்தியர்களிடையே தமிழர்கள் மீது துவேஷம் ஏற்பட வழி வகுத்தது திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டம். இன்று திமுகவினர் பலரும், குறிப்பாக திமுக தலைவர்கள் பலரும் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்து டெல்லி வட்டாரத்தில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். ஆனால் இந்தியைத் தெரிந்து கொள்ளாமல் போன தலைமுறை இன்றும், தமிழகத்தைத் தாண்டி வெளியே போக முடியாத நிலையில்தான் உழன்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அரசே இந்தி கற்றுத் தர வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த 64 வயது தொண்டர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி தட்சிண பாரத இந்தி பிரசார சபா சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், பிப்ரவரியில் ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிர பாஷா, ப்ரவேசிகா, விஷாரத், ப்ரவீன் தேர்வு நடக்கிறது.
நெல்லை சாப்டர் பள்ளியில் 508 பேர், ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் 650 பேர், லிட்டில்பிளவர் பள்ளியில் 700 பேர் இந்தித்தேர்வு எழுதினர்.
இவர்களுடன் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாளை. யை சேர்ந்த மூத்த திமுக தொண்டர் சங்கரகணபதி ப்ராத்மிக் தேர்வு எழுதினார். குழந்தைகளுடன் அமர்ந்து இவர் தேர்வு எழுதியதை கண்டு அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
இதுகுறித்து சங்கரகணபதி கூறும்போது, கடந்த 65ம்ஆண்டு பத்தாம் வகுப்பில் படித்த போது திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றேன். திமுக அரசு இந்திக்கு தடை விதித்தது.
ஆனால் திமுக தலைவர்களின் குடும்பத்தினர் இந்தி அறிந்தவர்கள். அப்பாவி மக்கள் தான் இந்தி அறியாமல் உள்ளனர். இந்தியின் அருமை எனக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது.
தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களுக்கு சென்றால் இந்தி தெரிந்தால் பிரச்னை இல்லை. வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்தியர்களுடன் பேச இந்தி அவசியம்.
எனவேதான் இந்தியின் அவசியத்தை உணர்ந்து தற்போது ப்ராத்மிக் எழுதியுள்ளேன். இதில் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன். அடுத்தக்கட்ட தேர்வுகளும் எழுதுவேன். தமிழக பள்ளிகளில் இந்தி கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications