உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: நல்லக்கண்ணு நம்பிக்கை
தருமபுரி: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர். நல்லக்கண்ணு கூறியதாவது, தமிழகத்தில் விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி தொடரும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக அதிகாரங்களை வழங்க வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நேரடி தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும். கடந்த 1976ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிலமீட்பு போராட்டத்தை நடத்திய போது அப்போதைய முதல்வர் கருணாநிதி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார்.
நில பறிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களே நேரடியாக போலீசாரிடம் புகார் செய்கின்றனர். இதில் பொய் வழக்கு, பழிவாங்கும் நடவடிக்கை இருக்க வாய்ப்பில்லை. நிலபறிப்பை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலமோசடிகளை தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. லோக்பால் சட்டம் குறித்த முன்வடிவு கடந்த 1969 ல் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த 41 ஆண்டுகளாக இது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பிரதமரும் ஒரு எம்.பி. என்பதால் அவரையும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஊழலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தினால் அது சட்ட விரோதம் என்று மத்திய அரசு தடுக்கிறது. இது காங்கிரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
இவ்வாறு நல்லக் கண்ணு கூறினார்.












Click it and Unblock the Notifications