அன்னா ஹஸாரேவை விடுவித்தது மத்திய அரசு-சிறையிலிருந்து வெளியேற அன்னா மறுப்பு!

நேற்று காலையில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாவிரதம் தொடங்குவதாக இருந்தார் ஹஸாரே. ஆனால் அதிகாலையிலேயே அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் அதிரடியாக ஹஸாரேவை கைது செய்து விட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன.
இதையடுத்து ஹஸாரே மீதான வழக்கைத் திரும்பப் பெற அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக சிறப்பு மாஜிஸ்திரேட் முன்பு போலீஸார் மனு செய்தனர். இதை ஏற்ற மாஜிஸ்திரேட், அன்னாவை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு அன்னா ஹஸாரே அடைக்கப்பட்டிருந்த திஹார் சிறைக்கு ஓடினர் போலீஸ் அதிகாரிகள். உத்தரவைக் காட்டி அவரை விடுவிக்க திஹார்சிறை அதிகாரிகளிடம் கூறினர். அவர்களும் அன்னா உள்ளிட்டோரை விடுவிக்க உத்தரவிட்டனர்.
ஆனால் அன்னாவும் மற்றவர்களும் வெளியேற மறுத்து விட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நிபந்தனையற்ற அனுமதி தரப்பட வேண்டும் என்று அன்னா நிபந்தனை விதித்துள்ளார். அதை நிறைவேற்றாதவரை நான் சிறையிலிருந்து வெளியேற மாட்டேன் என்றும் அவர் கூறி விட்டார். இதனால் போலீஸாருக்கும், சிறை அதிகாரிகளுக்கும் பெரும் தர்மசங்கடமாகி விட்டது.
போலீஸார் பலமுறை சமாதானப்படுத்தியும் அன்னா அதைக்கேட்கவில்லை. இதனால் இரவு முழுவதும் அன்னா ஹஸாரே சிறையிலேயே இருக்க நேரிட்டது. இன்னும் அவர் வெளியே வரவில்லை. சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடிக் காத்துள்ளனர். அக்கம் பக்கத்தில் வசிப்போர் குடும்பத்தோடு சிறைக்கு முன்பு கூடி ஹஸாரேவைக் காண காத்துள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்டது முதல் அன்னா ஹஸாரே சாப்பிடவில்லை. நேற்று இரவும் அவர்சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார்.
தற்போது மாஜிஸ்திரேட் விடுதலை செய்ய உத்தரவிட்டு விட்டதால் இனியும் அன்னா, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கைதிகள் கிடையாது. விதிமுறைப்படி அவர்களை சிறையை விட்டு அனுப்பி விட வேண்டும். ஆனால் அவர்கள் வெளியேற மறுப்பதால் சிறை அதிகாரிகள் பெரும்குழப்பத்தில் உள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக தற்போது அவர்கள் காத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மணீஷ் சிஸோடியா மட்டும் விடுதலை உத்தரவைப் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்துள்ளார். சிறைக்கு வெளியே வந்த அவர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் இணைந்து தர்ணாவில் பங்கேற்றுள்ளார்.
தான் மட்டும் வெளியே வந்தது குறித்து சிஸோடியா கூறுகையில், அன்னாவின் செய்தியைக் கூறுவதற்காகவே நான் வெளியே வந்துள்ளேன். ஜேபி பார்க்கில் உண்ணாவிரதம் இருப்பது உறுதி. இதற்கான நிபந்தனையற்ற அனுமதி கிடைக்கும் வரை அன்னா ஹஸாரே வெளியேவர மாட்டார் என்றார்.
சிறைக்கு உள்ளே அன்னாவும், சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்களும் விடிய விடிய நடத்திய போராட்டத்தால் திஹார் சிறைப் பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.
ராசா-கல்மாடியுடன் அடைப்பு
திஹார் சிறையில் ஊழல் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்ட்டுள்ள 4வது வார்டில் ஹஸாரே அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள ராசா உள்ள முதலாவது வார்டில் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications