எஞ்சியுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு
சென்னை : சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் கூட்டம் நடத்துவது என்றும், எஞ்சியுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்பது என்றும் திமுக முடிவு எடுத்துள்ளது.
நேற்று சட்டசபையில் துரைமுருகனால் பெரும் குழப்பம் ஏறப்ட்டு விட்டது. அவர் தனது பாடி லாங்குவேஜ் மூலம் தன்னை கேலி கிண்டல் செய்து அநாகரீகமாக நடந்து கொள்வதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டினார். இதையடுத்து சூடான வாக்குவாதம் நடந்தது. இறுதியில் திமுக வெளிநடப்புச் செய்தது.
இதையடுத்து நேற்று இரவு கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்ட்ம் நடந்தது.
இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
- தி.மு.க. சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் 23 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், பேரவையில் இடங்கள் ஒதுக்கும்போது, தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கித் தராததால், பேரவையில் எங்கள் கட்சியினருக்கு ஒரே பகுதியிலே இடம் ஒதுக்கித் தரும்வரையில் அவையில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துத் தெரிவித்திருந்தோம்.
அதற்கு பிறகும் எங்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கித்தராததால் பேரவையில் தி.மு.க.வின் சார்பில் யாரும் கலந்துகொள்ளாமல் நிதிநிலை அறிக்கையின் பொதுவிவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தோம்.
நேற்றைய தினம் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ள நாளில் பேரவை நடவடிக்கைகளில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டோம். ஆனால், பேரவையில், நேற்று கேள்வி நேரம் தொடங்கப்பட்டவுடன் முதல் கேள்வியின் போதே- பொதுவாக கேள்வி நேரத்தில் யார் மீதும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்ற மரபிற்கு மாறாக- கேள்வி கேட்கும் உறுப்பினர்களும்- அதற்கு பதில் அளிக்கும் அமைச்சர்களும்- தி.மு.க.வின் மீதும், தி.மு.க. ஆட்சியின் மீதும் குற்றச்சாட்டு கூறுவதிலும், தாக்கிப் பேசுவதிலுமே கவனத்தைச் செலுத்தினார்கள்.
தி.மு.க. சட்டமன்ற கட்சியின் துணைத்தலைவர் துரைமுருகன் இந்த விவாதத்தின்போது, எதுவும் பேசாமல் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நிலையில்-அமைச்சர் ஒருவர் துரைமுருகன் ஏதோ ஜாடை காட்டி கிண்டல் செய்வதாக; திட்டமிட்டு பேரவையில் ஒரு தவறான தகவலைத் தெரிவித்தார்.
துரைமுருகன் அந்தச் செய்தியை மறுக்க முயற்சித்த போதிலும் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவருக்கு வாய்ப்பளிக்காமல் எம்.எல்.ஏ. சரத்குமாரும், வளர்மதியும் எழுந்து துரைமுருகனை அவதூறாக பேசினர். சரத்குமார் தேவையில்லாமல் தலைவர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு தாறுமாறாகப்பேசினார்.
இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தையொட்டி, இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் மேலும் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- பேரவையில் நடைபெற்ற விவாதங்களையொட்டி, பொதுமக்களுக்கு அனைத்தையும் விளக்கும்வகையில் வருகிற 25-ந் தேதி அன்று சென்னையில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்துவதென்றும், அதில் தலைவர் கருணாநிதியும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வதென்றும், தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே தலைப்பில் பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு உரையாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது என்று தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications