உள்ளாட்சித் தேர்தலில் திமுக-காங். கூட்டணி நீடிக்கும்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு,
கேள்வி :- உள்ளாட்சித் துறைக்கான தேர்தல்கள் விரைவில் வர விருக்கிறதே, திமுக கூட்டணி எப்படி அமையும்?
பதில் :- கூட்டணி பற்றி இப்போது உறுதியாகச் சொல்ல இயலாது. திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.
கேள்வி :- வேறு ஏதாவது கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா?
பதில்:- வேறு கட்சிகளைப் பற்றி நான் சொல்ல இப்போது தயாராக இல்லை.
கேள்வி :- பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் கருணை மனுவை குடியரசு தலைவர் ரத்து செய்திருக்கிறார்கள், அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் மரண தண்டனைகளைப் பற்றி குறிப்பிட்டு யாரையும் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. பொதுவாக மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். அந்தக் கருத்து இவர்களுக்கும் பொருந்தும்.
கேள்வி:- திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுகவினர் போட்டி சட்டசபை நடத்தினார்களே, அது போல நடத்துவீர்களா?
பதில்:- தமிழகச் சட்டமன்றத்தில் நடக்கின்ற ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை விளக்க பல முறைகளைக் கையாளுவோம். அதில் நீங்கள் சொல்கிற முறையைப் பற்றியும் சிந்திப்போம். பொதுவாக ஒரு ஆளுங்கட்சி; எல்லா கட்சிகளும் அவையிலே பங்கு பெற்று கருத்துகளைப் பரிமாற வேண்டும் என்று தான் விரும்பும்.
இன்றைக்கு நாடாளுமன்றத்திலே கூட எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசுகிறார்கள். எல்லோரும் அமர்ந்து பேச வேண்டும், எந்த மாறுபட்ட கருத்தானாலும் அவைகளைப் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து இது.
கேள்வி:- டெல்லியில் அன்னா ஹஸாரே கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
பதில்:- இரு தரப்பிலும் பிடிவாதத்தைத் தளர்த்தியிருக்கலாம்.
கேள்வி :- அறிவாலயத்தில் இந்த முறை இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்ச்சி நடைபெற்றதற்கு என்ன காரணம்?
பதில் :- இந்தியா முழுவதிலும் ஒரேநேரத்தில் காலை 8 மணிக்கு ஏற்றப்பட்ட கொடி இந்தியத் தேசியக் கொடி. அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்திலும் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறோம். நாங்கள் இந்திய நாட்டு விடுதலையை வரவேற்பதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதும் இப்போதல்ல, சுதந்திரம் வந்தபோதே அதை வரவேற்று நீண்ட கட்டுரை தீட்டியவர் எங்கள் தலைவர் அண்ணா அவர்களாவார்கள்.
கேள்வி:- நீங்கள் சட்டசபையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதை உங்கள் கடமையிலிருந்து தவறி விட்டதாக ஆளுங்கட்சிக்காரர்கள் விமர்சிப்பார்களே?
பதில் :- தீயினால் சுட்ட வடுவை விட, நாவினால் சுட்ட வடு கொடுமையானது. நாவினால் என் தம்பிமார்கள் சட்டமன்றத்திலே சுடப்படும்போது, அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கேள்வி :- சட்டமன்றத்தில் நீங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் அவையை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டணியிலே உள்ள காங்கிரஸ் கட்சி இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?
பதில் :- காங்கிரஸ் கட்சியின் சார்பில் அங்கே ஐந்து பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்.
கேள்வி:- மத்தியில் உங்கள் கட்சிக்கென்று இருந்த அமைச்சர் பதவிகள் தற்போது காலியாக உள்ளதே, அது நிரப்பப்படுமா?
பதில்:- இப்போது அதைப்பற்றி பதில் சொல்ல இயலாது.
கேள்வி:- அரசு அடக்குமுறை தொடர்ந்தால், போராட்டம் தொடரும் என்று சொல்லியிருந்தீர்கள். தற்போது ஒரு போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறீர்கள். அந்தப் போராட்டம் தொடருமா?
பதில்:- நீங்கள் போராட்டம் நடத்தாமல் விட மாட்டீர்கள் போல் இருக்கிறதே என்றார்.












Click it and Unblock the Notifications