சொத்து குவிப்பு: நல்லம நாயுடுவை விசாரிக்க கோரும் சசி மனு மீது 20ம் தேதி தீர்ப்பு
பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கில் விசாரணை அதிகாரியான நல்லம நாயுடுவை நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது வரும் 20ம் தேதி பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான நல்லம நாயுடுவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், விசாரணை அதிகாரியை அழைத்து விசாரிக்கக் கோரும் மனு மீது சுமார் 2 மணி நேரம் நேரம் வாதிட்டார். அவர் கூறுகையில், சாட்சிகள் முதல் முறையாக விசாரிக்கும்போது ஒரு மாதிரியாகவும், மறு விசாரணை நடத்தும்போது வேறு மாதிரியாகவும் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் சிலர் கூறிய தகவல்கள் முரண்பாடாக உள்ளன. இதனால் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அழைத்து விசாரித்தால்தான் அதற்கு தீர்வு கிடைக்கும். எனவே, எங்களது தரப்பின் நியாயங்களை ஏற்று இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
இதை எதிர்த்து வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விசாரணை அதிகாரியிடம் விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இருதரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கை 20ம்ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் சசிகலா, இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications