சசிகலாவின் சகோதரி வனிதாவின் உடல் மன்னார்குடியில் தகனம்
மன்னார்குடி: முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்காள் வனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் தகனம் செய்யப்பட்டது.
மன்னார்குடி மன்னை நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தம். திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வனிதா மணி (65). சசிகலாவின் அக்காளான இவர் மாரடைப்பால் திருச்சியில் அவரது இல்லத்தில் நேற்று அதிகாலை மரணமடைந்தார்.
வனிதா மணியின் உடல் மன்னார்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 9 மணிக்கு பாமணி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
வனிதா மணியின் மகன்கள் தான் தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் ஆவர். இவருக்கு சீதாதேவி என்ற மகளும் உள்ளார்.
வனிதாவின் மகன் சுதாகரனைதான் ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியில் சுதாகரன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வனிதாவின் மறைவையடுத்து சசிகலா மன்னார்குடி வந்தார். அதே போல முதல்வர் ஜெயலலிதாவும் அஞ்சலி செலுத்த வருவார் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.












Click it and Unblock the Notifications