முருகன், சாந்தன், பேரறிவாளனைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு ம.தி.மு.க., பொதுச் செயயாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயக்குமார், ராபர்ட் பயசை ஆகியோரை ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ராஜீவ் கொலை சம்பவத்துக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில், 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சித்ரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலம் அடிப்படையில் வழங்கப்பட்ட மரண தண்டனையை சமூக ஆர்வலர்கள் எதிர்த்த காரணத்தினால், இதில் 19 பேரை விடுதலை செய்தனர்.
நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், மேல் முறையீடு செய்த போது, நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற 3 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார்.
கடந்த காலத்தில், உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வழி வந்த குருசாமி, கோவிந்தசாமி ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும், தூக்கிலிடும் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு அவர்களை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்றியது. அதேபோல இந்த மூன்று பேருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்.
தமிழகத்தில், கடந்த 13 ஆண்டுகள் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா கருணை உள்ளம் கொண்டு இந்த 3 நிரபராதிகளின் உயிரை காப்பாற்ற முன் வருவார் என நம்புகின்றேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு அதற்கான அதிகாரத்தை பயன்படுத்தி தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications