செப்டம்பர் 22ம் தேதி முதல் காலாண்டுத்தேர்வுகள் ஆரம்பம்- பாடங்கள் குறைப்பு
சென்னை: தமிழக பள்ளிக்கூடங்களில் செப்டம்பர் 22ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. குறுகிய காலமே உள்ளதால் பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வியாண்டிற்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
காலாண்டுத் தேர்வுக்கு இருக்கக் கூடிய காலஅளவை கருத்தில் கொண்டு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுகளை எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் காலத்திலிருந்து நீட்டித்து ஒருவார காலத்திற்குப் பின்னர் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் காலத்திலிருந்து ஒரு வாரத்திற்குப் பின்னர், 22.09.2011 (வியாழக்கிழமை) அன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பள்ளிகளில் பாடப் புத்தகம் இன்னும் வரவில்லை
இதற்கிடையே, பல பள்ளிகளில் இன்னும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பள்ளிகளில் பெற்றோர்கள் கேட்டபோது, இன்னும் எங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.வந்தவுடன் மாணவர்களுக்குத் தருவோம் என்று கூறுகின்றனர்.
பெரும்பாலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்தான் இந்த நிலை உள்ளது. இதனால் காலாண்டுத் தேர்வு இங்கு எப்படி நடக்கப் போகிறது என்பது பெரும் குழப்பமாக உள்ளது.












Click it and Unblock the Notifications