புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
கொழும்பு: இறுதி கட்ட போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யும் வாய்ப்பே இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்து முடிந்தபாடில்லை. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் வடக்குப் பகுதியில் தற்போதைக்கு மீள் குடியேற்றம் செய்ய முடியாது என்று அரசின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் தான் இறுதி கட்ட போர் நடந்தது. அதனால் அப்பகுதிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பகுதிகள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் இந்த பகுதிகளில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடியவில்லை. அதனால் அங்கு இப்போதைக்கு மீள் குடியேற்றம் செய்யும் வாய்ப்பே இல்லை.
போரின்போது இடம்பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல், கண்ணி வெடிகளை அகற்றாத பகுதிகளில் இருந்து அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பலவற்றை அரசு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய நினைத்தால் அதற்கு சுமார் 25 ஆண்டுகள் ஆகும். வெகு விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications