சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை-2 நாட்களுக்கு நீடிக்கும்
சென்னை : சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது. இன்றும் பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னையில் மட்டும் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்து வந்தது. அவ்வப்போது மேகம் கூடுவதும், பின்னர் கலைவதுமாக கண்ணாமூச்சி ஆடி வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பல பகுதிகளில் மழை பெய்தது.
அண்ணா சாலை, அண்ணா நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
இன்று காலையிலும் பல பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. இதேபோல புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவில் நல்ல மழை பெய்தது.
இன்று காலை முதல் மழை பெரிய அளவில் இல்லை என்ற போதிலும் வெளிச்சத்தைக் காண முடியவில்லை. வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.
வெப்பச் சலனம் காரணமாக பெய்து வரும் இந்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications