தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: ரூ. 3 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்
சுரண்டை: சுரண்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே சண்முகாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு தாவிர கழிவுகளை எரித்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள தாவர மரக்கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. எனினும் தீ கொளுந்து வி்ட்டு எரிகிறது. விடிய விடியப் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
மரக்கழிவு முழுவதும் பரந்து கிடப்பதால் பனை மர உயரத்திற்கு தீ பற்றி எரிகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு தீ மேலும் பரவாமல் இருக்க மரக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தீயணைப்பு கோட்ட அலுவலர் பத்மகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.3 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications