எம்.பிக்கள் வீடுகளை இன்று முதல் முற்றுகையி்ட்டுப் போராட்டம்-கேஜ்ரிவால்
டெல்லி 6 நாட்களாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் அரசுத் தரப்பில் இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைத் திட்டமும் வரவில்லை. திங்கள்கிழமை முதல் எம்.பிக்கள் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று அன்னா குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், கிரண் பேடி உள்ளிட்ட அன்னா குழுவினர் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், அன்னா ஹஸாரே 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒருதகவலும் இல்லை.
எனவே திங்கள்கிழமை முதல் எம்.பிக்கள், மத்தியஅமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். எங்களுக்கான மசோதாவை நிறைவேற்ற முடியாவிட்டால் மீண்டும் எங்களைத்தேடி ஓட்டுக் கேட்டு வர வேண்டாம் என்று அப்போது மக்கள் முழக்கமிடுவார்கள்.
பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பிரதமர் கூறியுள்ளார். அவர் யாருடன் பேச விரும்புகிறார், எப்போது பேச விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் கேஜ்ரிவால்.
சமரசப் பேச்சில் 2 பேர்
இதற்கிடையே, அன்னா ஹஸாரேவை சமரசப்படுத்தும் முயற்சியில் ரகசியப் பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆன்மீ்கத் தலைவரும், அன்னாவுக்கு நெருக்கமானவருமான பைய்யூ மகராஜ் என்பவர் தற்போது அன்னா மற்றும் மத்திய அரசு இடையே பேசி வருவதாக தெரிகிறது. நேற்று அன்னாவை ஒரு மணி நேரம் சந்தித்து தனிமையில் பேச்சுவார்த்தை நடத்தினார் பைய்யூ மகராஜ்.
அப்போது லோக்பால் மசோதாவை நிறைவேற்ற 4 மாத கால அவகாசம் தரும்படியும், ஜன் லோக்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு விடப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை அன்னா குழுவினர் ஏற்க மறுத்து விட்டனர்.
இவர் தவிர மகாராஷ்டிர மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் உமேஷ் சந்திர சாரங்கியும் டெல்லி வந்து அன்னா குழுவினரை சந்தித்துப் பேசியுள்ளார். அன்னாவுடன் 2 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தியுள்ளார். இருப்பினும் இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
மும்பையில் லட்சம் பேர் பேரணி
இதற்கிடையே, அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் நேற்று ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பேரணியில் மக்கள் கலந்து கொண்டனர்.
பந்த்ராவிலிருந்து ஜூஹு வரை இந்தப் பேரணி நடைபெற்றது. இதேபோல டெல்லி இந்தியா கேட் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கூடி கையில் மெழுகுவர்த்திகளுடன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications