அடிக்கடி மாறும் பாமக கொள்கை, அரைவேக்காட்டுத்தனமான சமச்சீர் கல்வி-ஜெயலலிதா சாடல்
சென்னை: பாமகவுக்கு நிலையான கொள்கை இல்லை, அடிக்கடி கொள்கையை மாற்றுவதே அதன் பழக்கமாகி விட்டது. அது ஆதரவு கொடுத்த சமச்சீர் கல்வி அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது. பிள்ளைகள் எப்படிப் படிக்கப் போகிறார்களோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாமக உறுப்பினர் காடுவெட்டி குரு நேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் தற்போது பொதுப்பாடத்திட்ட முறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. முழுமையான சமச்சீர் கல்வியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "பாமகவின் கொள்கை நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி ஏராளமான குறைகள் இருப்பதால் அவற்றை எல்லாம் சரி செய்து அடுத்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதாக நாங்கள் கூறினோம்.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் இந்த ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று பாமக, காங்கிரஸ் மற்றும் திமுகவினர் வலியுறுத்தினார்கள்.
உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை நாங்களும் ஏற்று கடந்த திமுக ஆட்சியில் 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி உள்ளோம்.
ஆனால் இப்போது அந்த புத்தகங்களில் ஏராளமான தவறுகள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாந்திரி ஆகியோர் மறைந்த தேதிகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளன.
மொத்தத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் அரைவேக்காடு ஆக உள்ளன. இந்த பாடப்புத்தகங்களை மாணவர்களை எப்படி படிக்கப் போகிறார்களோ என்ற அச்சம் தான் ஏற்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications