இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
திருப்பூர்: இலங்கை தமிழர்கள் பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
திருப்பூரில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க திருப்பூர் வந்த சுப்பிரமணிய சாமி நிருபர்களிடம் பேசுகையில்,
நாட்டில் ஊழல் அதிகமாகி மத்திய அரசுக் கூட்டணியில் உள்ள பலர் திகார் ஜெயிலில் தான் இருக்கிறார்கள். ஜன் லோக்பால் மசோதாவில் ஒரு சுதந்திரமான விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே நான் ஆதரிக்கிறேன். பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே பிடிவாதம் பிடிக்காமல், பிரதமரையும் அமைச்சர்களையும் விசாரிக்க ஜனாதிபதியின் அனுமதி தேவையில்லை என்ற கருத்தை மட்டும் வலியுறுத்த வேண்டும்.
நான் முஸ்லிம்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்ள தயார். ஆனால் அவர்கள் தங்களது முன்னோர்கள் இந்துக்கள் தான் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் இன்று கருணை மனு போடுகிறார்கள் .கொலைகாரர்களுக்கு எதற்கு கருணை காட்ட வேண்டும். இலங்கை தமிழர்கள் பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும்.
ஆனால் வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக்கொண்டால் நான் இலங்கை அதிபரை சந்திப்பேன். பிறகு அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றி தமிழர்கள் சுயாட்சி பெற ஏற்பாடு செய்வேன்.
இல்லையென்றால் நான் செய்த பிறகு இவர்கள் செய்ததாகக் கூறுவார்கள். ஏற்கனவே முல்லைப் பெரியாறு பிரச்சனையில் 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி நீர்மட்டத்தை உயர்த்த செய்தேன். ஆனால் இவர்கள் செய்ததாக சொல்லிக் கொண்டார்கள்.
எனவே இவர்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொண்டால் நான் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்.
திருப்பூரில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடத்திய வி.எச்.பி. தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி மீது எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் ஒரு கல்லறை மாதிரி தான் உள்ளது. அதில் தமிழர்கள் கட்டடக் கலையோ, சிற்ப சாஸ்திர முறையிலோ இல்லை. இது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். அதை மருத்துவமனையாக மாற்றும் முதல்வர் ஜெயலலிதாவும் முடிவை வரவேற்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications