சென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்த பூசாரி: தப்பிக்கையில் இடுப்பெலும்பு முறிவு
சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டையில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயன்ற பூசாரி தப்பிப்பதற்காக 2-வது மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பூசாரி ராமகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாபர்கான் பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் பூஜை நடத்தினார். அப்போது அந்த குடியிருப்பை நோட்டம் போட்ட அவர் அங்குள்ள பெண்கள் தனியாகவும், நிறைய நகைகள் அணிந்திருப்பதையும் கவனித்தார்.
நேற்று மீண்டும் அதே குடியிருப்புக்கு சென்ற ராமகிருஷ்ணன் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் கதவை தட்டினார். அந்த வீட்டில் இருந்த மாதவி (26) என்ற பெண் கதவைத் திறந்தார். உடனே அவர் தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி மாதவியிடம் நகைகளைப் பறிக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் மாதவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாதவியைக் கத்தியால் குத்தினார். இதில் மாதவியின் கையில் கத்தி குத்து விழுந்தது. சிக்கினால் தர்ம அடி தான் என்று நினைத்த அவர் தப்பித்துச் செல்வதற்காக 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தி குத்து விழுந்த மாதவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications