சொத்து மதிப்பு- வீரபாண்டி ஆறுமுகம் மகன் மீது நடவடிக்கை: அமைச்சர்
சென்னை: சந்தை மதிப்பை குறைத்து காட்டி, சொத்து வாங்கியது தொடர்பாக, முன்னாள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டசபையில் நடந்தது. இதில், நிலஅபகரிப்பில் ஈடுபட்டவர்கள், சொத்து மதிப்பை குறைத்து காட்டியுள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கை குறித்தான கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய வணிகவரித் துறை அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிலுவையில் உள்ள சொத்தின் மதிப்பை குறைத்து காட்டி, பதிவுத் துறையில் முறைகேடு செய்துள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த வரிசையில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் உள்ள தங்கவேலுவிடம் சொத்தை வாங்கும் போது, மதிப்பை குறைத்து காட்டியுள்ளார்.
இதனால், அரசுக்கு 12,07,040 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மற்றோரு வழக்கில், 16,09,976 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதேபோல மாநிலத்தின் பல இடங்களில் சொத்து மதிப்பை குறைத்து காட்டி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.












Click it and Unblock the Notifications