வரதட்சனை கொடுமை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உள்பட 17 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: வரதட்சனை கொடுமை சட்ட பிரிவின் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உள்ளிட்ட 17 பேர் மீது கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி ஆர்.எஸ்.லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கலையரசிக்கும், தர்மபுரி மாவட்டம் ஆரதஅள்ளி கிராமத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சசி (எ) ரமேஷ்குமாருக்கும் கடந்தாண்டு ஜூன் 26ம் தேதி திருமணம் நடந்தது.
இவர்கள் திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 50 பவுன் நகையும், 5 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், திருமணம் நடந்த 4 மாதத்துக்கு பிறகு மேலும் வரதட்சணை வாங்கி வர கலையரசியை, சசி வற்புறுத்தினாராம்.
மேலும், கலையரசியை மாமியார் பார்வதி (62) மற்றும் அவர்களது உறவினர்கள் சுரேஷ் (45), ஜெயமணி (30), சரசம்மா (57), வினோபாஜி (57), திலகவதி, லோகநாதன், வெங்கடேசன், சந்தோஷ் (30), அருணாதேவி, தர்மன் (27), ராஜன் (57), சாந்தி (45), சரஸ்வதி (29), முனியம்மாள் (50), தீபா (25) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் ஆபாச வார்த்தையால் திட்டி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், தான் கர்ப்பமாக இருந்த போது, தனது வயிற்றின் மீது உதைத்ததில் கரு கலைந்து விட்டதாகவும், இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என அவர்கள் மிரட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் கலையரசியின் கணவரான சசி (எ) ரமேஷ்குமார் உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications