புதுவையிலும் அரசு கேபிள் டி.வி-முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியிலும் அரசு கேபிள் டி.வி. தொடங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.
புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசுகையில், புதுச்சேரியில் புற்றீசல் போல கேபிள் சேனல்கள் இருக்கின்றன. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இவை ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. புதுப்புது சேனல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் அரசின் கண்காணிப்பில் உள்ளனவா?. கேபிள் டி.வி. நடத்துபவர்கள் ரூ.150 முதல் ரூ.250 வரை இடத்துக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை முறைப்படுத்தவோ, கட்டணத்தை கட்டுப்படுத்தவோ அரசிடம் எந்த சட்டமும் இல்லை.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழகத்தில் எங்கள் அம்மா புரட்சித் தலைவி, அரசு கேபிள் டி.வியை தொடங்கி வைத்துள்ளார். இதற்காக மாதம் ரூ.70 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் புதுவை அரசும் மக்களின் நலனை கருதி கேபிள் டி.வியை ஏற்று நடத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் கேபிள் டி.வி. இணைப்பு வழங்க இரண்டு, முன்று பேர் தான் உள்ளனர். அரசுக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியை இவர்கள் செலுத்துவதில்லை. இந்த வரியை பாக்கி மட்டும் ரூ.70 கோடிக்கு மேல் உள்ளது. புதுவையில் 2 லட்சம் வீடுகளில் கேபிள் இணைப்பு உள்ளது. ஆனால் 12 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே இருப்பதா கணக்கு காட்டப்படுகிறது.
கேபிள் டி.வி. சேனல்களில் விருப்பு, வெறுப்புடன் தங்கள் இஷ்டத்துக்கு செய்திகளை வெளியிடுகிறார்கள். உண்மைக்கு புறம்பான பல செய்திகளை வெளியிடுகிறார்க்ள். எனவே பொதுமக்கள் நலன் கருதி தமிழகத்தை போல புதுவையிலும் அரசு கேபிள் டி.வியைத் தொடங்க வேண்டும் என்றார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதிலளிக்கையில், உறுப்பினர் நல்ல கருத்தைக் கூறியுள்ளார். அவர் சொல்லிய அனைத்தும் உண்மை. அரசு கேபிள் டி.வி. தொடங்குவது குறித்து விவரம் கேட்டுள்ளேன். விவரம் கிடைத்தவுடன கேபிள் டி.வி. தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications