தனிக்கட்சி தொடங்க ரெட்டி சகோதரர்கள் திட்டம்-எம்.எல்.ஏ பதவியிலிருந்து ஸ்ரீராமுலு விலகல்
எதியூரப்பா முதல்வராக இருந்தபோதே பெரும் தலைவலி மற்றும் குடைச்சலைக் கொடுத்தவர்கள் ரெட்டி சகோதரர்களும், ராமுலுவும். தற்போது எதியூரப்பவே பதவி காலியாகி வீட்டுக்குப் போய் விட்டார்.
அவருக்குப் பதில் முதல்வரான சதானந்த கெளடாவின் அமைச்சரவையில் ரெட்டி சகோதரர்களுக்கும், ராமுலுவுக்கும் இடம் தரப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்ட இவர்கள் தயாராகி விட்டனர்.
ஸ்ரீராமுலுவைத் தூண்டி விட்டு தனிக் கட்சி ஆரம்பிக்குமாறு அவர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. தங்களுக்கு சாதகமாக 30 எம்.எல்.ஏக்கள் வரை இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு ஸ்ரீராமுலுவும் ஆதரவு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இவர்களை இணைத்து தனியாக வெளியே வந்து புதுக் கட்சி தொடங்க மூவரும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதலில் தனது எம்.எல்.ஏ பத வியை ஸ்ரீராமுலு இன்று ராஜினாமா செய்தார். இவர் பெல்லாரி தொகுதி எம்எல்ஏ ஆவார். எதியூரப்பா அமைச்சரவையி்ல் இடம் பெற்றிருந்தார்.
இதுகுறித்து ஸ்ரீராமுலு கூறுகையில், அரசுக்கு நெருக்கடி தருவதற்காக நான் பதவி விலகவில்லை. என் மீது லோக் ஆயுக்தா போலீஸார், சுரங்க முறைகேட்டுப் புகாரைக் கூறியுள்ளனர். அவை பொய் என நிரூபிக்கவே பதவி விலகியுள்ளேன் என்றார்.
இருப்பினும் ரெட்டி சகோதரர்களுடன் இணைந்து ஸ்ரீராமுலு புதுக் கட்சி தொடங்கவுள்ளார் என்று தெரிகிறது. பாஜகவிலிருந்து வெளியேறி பி.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற (அதாவது பி.ஸ்ரீராமுலு காங்கிரஸ்) பெயரில் புதுக் கட்சியைத் தொடங்க ரெட்டி சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கட்சியை பின்னர் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து ஜெகன் மோகன் ரெட்டியுடன் கை கோர்க்கும் திட்டத்தில் ரெட்டி சகோதரர்கள் உள்ளனராம்.
இதுகுறித்து ரெட்டிகள் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ஜெகன் மோகனும் சரி, ரெட்டி சகோதரர்களும் சரி, இருவரையும் கட்சித் தலைமை கைவிட்டு விட்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு ஆந்திராவில் நல்ல ஆதரவு உள்ளது. தற்போது ஹைதராபாத் கர்நாடகப் பிராந்தியத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏக்கள் வெளியேற தயாராக உள்ளனர். எனவே இருவரும் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.
இருவரும் இணைந்து செயல்படுவதன் மூலம் இரு மாநிலங்களிலும் இவர்கள் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார்கள். இவர்களின் தயவு இன்றி இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றனர்.
இருப்பினும் கர்நாடக பாஜக தலைமை ரெட்டி சகோதரர்களின் வெளியேற்றத்தால் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, ரெட்டி சகோதரர்கள் வெளியேறிய பின்னர் கட்சியை நடத்துவது குறித்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அவர்கள் ஹைராபாத் கர்நாடக பாஜக தலைவர்களுக்கு வழங்க ஆரம்பித்து விட்டனர். ரெட்டிகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை கவனியுங்கள் என்று எதியூரப்பா மற்றும் மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர் லிங்காயத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.