விருத்தாச்சலத்தில் அட்டகாசம்- பஸ் கண்டக்டரை சரமாரியாக அடித்து உதைத்த பெண் எஸ்.ஐ.
விருத்தாசலம்: காவல் நிலையம் முன் நிறுத்தாத தனியார் பஸ் கண்டக்டரை பெண் எஸ்.ஐ. அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வனஜா. இவர் கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு தனியார் பஸ்சில் சென்றுள்ளார். பஸ் விருத்தாசலம் வந்த போது, வழியில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்துமாறு எஸ்.ஐ. வனஜா கூறியுள்ளார்.
ஆனால் பஸ் காவல் நிலையத்தில் நிற்காமல் அதை தாண்டி அடுத்த ஸ்டாப்பான தாலுகா அலுவலகத்தில் நின்றது. இதனால் ஆவேசமடைந்த எஸ்.ஐ. வனஜா, பயணிகள் முன்னிலையில் கண்டக்டர் பாலமுருகனை அடித்து உதைத்தார். பின்பு கண்டக்டர் பாலமுருகனை (20) காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார்.
தகவலறிந்த தனியார் பஸ் ஊழியர்கள் கண்டக்டர் பாலமுருகனை விடுவிக்க கோரி விருத்தாசலம் காவல் நிலையம் முன்பு கூடி திடீர் போராட்டம் நடத்தினர். இதனால், பஸ் கண்டக்டர் மற்றும் பஸ் உரிமையாளர்களிடம் இன்ஸ்பெக்டர் சீராளன் பேச்சு வார்த்தை நடத்தனர்.
தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து, தனியார் பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications