தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிக்கக்கூடாது: பிரகாஷ் கரத்
டெல்லி: வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கூறியதாவது:
2008 ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியை தொடர்ந்து, வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது என்று மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு எடுத்து இருக்கிறது. இது நல்ல முடிவு அல்ல.
தனியார் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதித்தால் அந்த வங்கிகளில் இருந்து அந்த நிறுவனங்களே அதிக அளவில் கடன் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் பல நிதி முறைகேடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த 1969ம் ஆண்டு வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கையை இந்திரா காந்தி மேற்கொண்டார். ஆனால் இப்போது, வங்கிகள் தொடங்க பெரிய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து இருப்பது முன்பு இந்திராகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிரானது ஆகும்.
எனவே வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
தற்போது பொதுத்துறை வங்கிகள் கிராமப்புறங்களிலும் தங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்து முறையில் செயல்பட்டு வருகின்றன," என்றார்.












Click it and Unblock the Notifications