இன்று ஆசிரியர் தினம் கொண்டாட்டம்-ஆளுநர், கருணாநிதி, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
தரமான கல்வியானது தரமான ஆசிரியர்களை சார்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் தங்களது இதயம் மற்றும் ஆன்மாவை தரமான கல்வியை அளிக்கவும், மாணவர்களை சிறந்த குடிமகன்களாக உருவாக்கவும் அர்ப்பணிக்க வேண்டும்.
சமூகத்தில் ஆசிரியர்கள், செயல்கள் மற்றும் நடத்தைகளால் முன்மாதிரியாக விளங்க வேண்டும். இந்த நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முதல்வர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்புக்கு மட்டுமல்லாமல் அவரது ஏழு பிறப்பிலும் உதவிடும் என்று வள்ளுவப் பெருமான் போற்றிப் புகழும் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள் ஆவார்கள்.
நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்தம் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்ததாகும்.
ஆசிரியர் தினமான இந்நன்னாளில் ஆசிரியப் பெருமக்கள் ஆற்றுகின்ற இந்த அரியப் பணியினைப் பாராட்டி சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை அரசு வழங்குகிறது. இந்த கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் நான் வாழ்த்துகிறேன்.
தமிழக அரசின் அரிய பல கல்வித் திட்டங்களுக்கு ஆசிரியப் பெருமக்கள் துணை நின்று,எதிர்கால இந்தியாவின் தூண்களாம் மாணவச் செல்வங்களைச் சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும். அயராது உழைத்து வரும் ஆசிரியப் பெருமக்களின் பணி மேன்மேலும் சிறக்க ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.
கருணாநிதி-விஜயகாந்த்
திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தியில், சிறப்பாக பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு அந்நாளில், "நல்லாசிரியர் விருது' என வழங்கப்பட்டது. அதை மாற்றி, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என வழங்க நான் ஆணையிட்டேன்.
"ஆசிரியர்கள் ஏங்கினால், வகுப்பறைகள் தேங்கும்' என அண்ணா கூறிய மொழிகளை நினைவில் கொண்டு, தி.மு.க. ஆட்சிக்காலங்களில் ஆசிரியர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திடும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வித் திட்டம், உச்ச நீதிமன்றத்தின் துணையோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சீரிய முறையில் பாடங்களை கற்பித்திட வேண்டும். தமிழக ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சட்டசபை எதிர்க்கட்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள செய்தியில், ஒரு சமுதாயத்தை பண்படுத்துவது கல்விதான். அந்தக் கல்வியை அனைத்து மக்களுக்கும் தருகின்ற கடமை ஆசிரியர்களுடையது.
எந்தச் சமுதாயம் ஆசிரியர்களுக்கு உயர்வான அந்தஸ்தை தருகிறதோ, அந்தச் சமுதாயம்தான் முன்னேறும்.
ஆசிரியர்கள் நிம்மதியுடனும், மன நிறைவுடனும் வாழ்வதற்கு ஒரு அரசு மட்டுமல்ல, சமுதாயமும் அடிகோல வேண்டும் என்பதே இந்த ஆசிரியர் தினத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய சூளுரையாகும். அத்தகைய ஆசிரியர்கள் எல்லா நலனும் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications