கருணாநிதி வீட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு?: சட்டசபையில் அதிமுக புகார்; மோதல், திமுக வெளிநடப்பு

சட்டசபையை தொடர்ந்து புறக்கணித்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் முடிவை கைவிட்டு இன்று அவைக்குத் திரும்பினர்.
ஜெயலலிதாவுக்கு வணக்கம் சொன்ன துரைமுருகன்:
தி.மு.க. சட்டமன்றத் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி நேரம் தொடங்கிய சிறிது நேரத்துக்கு பின் சபைக்கு வந்தார். முதலில் சபாநாயகருக்கும், பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்தார். ஜெயலலிதாவும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.
கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் கூறுகையில்,
சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள கால்வாய் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். 1967ல் இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. அப்போது இந்த இடத்தை கேட்டு மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
60க்கு 13 அளவுள்ள அந்த கால்வாய் இடம் வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில் மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றி அந்த இடத்தை கொடுத்துள்ளது. இதற்காக ரூ.3,250 அரசுக்கு செலுத்தியுள்ளார்.
அப்போது ஒரு நிபந்தனையுடன் அந்த இடம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. கால்வாயை சுத்தம் செய்ய மாநகராட்சி ஊழியர்கள் வருவார்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இடம் ஒதுக்கப்பட்டது.
அதன் பிறகு அந்த இடத்தை ஒதுக்கியது தவறு என்று தெரிந்ததும் கருணாநிதிக்கு கடிதம் எழுதி அந்தப் பணத்தை அரசு திருப்பி கொடுத்து விட்டது. ஆனால், அதன் பிறகு அந்த இடத்தை கருணாநிதி இன்னும் திருப்பி தரவில்லை.
வீட்டின் பின்புறம் நிரந்தரமாக ஷெட் போட்டு வைத்துள்ளார். அதில் தற்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசார் தான் உள்ளனர். வீட்டின் பின்புறமாக வெளியே போகவும் அந்த இடத்தை கருணாநிதி பயன்படுத்தி வருகிறார். கோபாலபுரம் பகுதி பள்ளமான இடமாகும். தண்ணீர் அடிக்கடி தேங்குவதால் கால்வாயை தூர் வாரினால்தான் தண்ணீர் செல்லும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கருணாநிதி அதைப்பற்றி கலைப்படவில்லை.
இதே போல் சென்னை அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்துக்கு முன் உள்ள மாநகராட்சியின் இடம் பூங்காவுக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை அங்கு பொதுமக்கள் பயன்படுத்த பூங்கா இல்லை. என்னைப் போன்றவர்கள் செல்வதற்கும் அங்கு தனியாக வாசல் இல்லை. கருணாநிதியே இந்த இடத்தை அபகரித்துள்ளதால் கட்சியில் உள்ள யாரையும் அவரால் கேள்வி கேட்க முடியவில்லை.
நில அபகரிப்பில் திமுகவினர் ஜெயிலுக்கு சென்றுள்ளனர். என் மீதும் என் மனைவி, மகன் மீதும் தி.மு.க. ஆட்சியில் திருட்டு வழக்கு போட்டனர். அதை கோர்ட்டில் சந்தித்து வெளியே வந்துள்ளோம்.
திமுகவினருக்குள்ள சின்ன புத்தி, எங்களுக்கு கிடையாது. இதேபோல் சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி, சித்திர ராமமூர்த்தி ஆகியோர் தங்களது இடங்களை நில உச்சவரம்பு சட்டப்படி அரசிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால். அந்த இடத்துக்கு போலி பட்டா வாங்கி முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் பெயரில் அபகரித்துள்ளார்.
அண்ணா நகரில் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் 1.32 ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.100 கோடி. இந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால், இதற்கு மேல் பேச விரும்பவில்லை.
அறிவாலயத்தில் 11,000 சதுர அடியில் வீடு இருப்பதாக கணக்கில் காட்டி உள்ளனர். அங்கு எங்கே வீடு உள்ளது?. திமுகவே கொள்ளைக் கூட்டமாக உள்ளது. பஞ்சபூதமும் கடந்த ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்டது என்றார்.
அப்போது திமுக சட்டமன்றத் துணைத் தலைவர் துரைமுருகன் பேச எழுந்தார். ஆனால், அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் வாய்ப்பு தரவில்லை.
சபாநாயகர் ஜெயக்குமார்: வெற்றிவேல் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்து பேசுகிறார். ஆனால் உறுப்பினர் துரைமுருகன் எந்த விதியின் கீழ் பேச முயல்கிறீர்கள். நீங்கள் நோட்டீசு எதுவும் தரவில்லையே? என்றார்.
இதையடுத்து துரைமுருகன் மீண்டும் பேச முயன்று சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
துரைமுருகனுக்கு எதிராக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அப்போது திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஏதோ கூற, அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு திமுக எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கூச்சலிடவே அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
அப்போது சபாநாயகர் ஜெயக்குமார் பேசுகையில், வெற்றிவேல் தப்பாக என்ன பேசிவிட்டார். அவர் பேசிய பிறகு உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அமைதியாக இருங்கள். சபைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் உங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என திமுகவினரை எச்சரித்தார்.
இந் நிலையில் மன்னார்குடி தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தனது செல்போனால் அவை நடவடிக்கைகளை படம் எடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவைக் காவலர்களால் அந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இது அவையை மீறிய செயல் என்பதால் செல்போனில் என்ன படம் எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய அதை அவையின் உரிமைக் குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து தி.மு.கவினர் தங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை எனக்கூறி துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.கவினர் வெளியேறிய பின் அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் தொடர்ந்து பேசுகையில், கொளத்தூர் ஜவகர் நகரில் பள்ளிக்கூட சாரணியர் இடத்தை ஆக்கிரமித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகம் கட்டி உள்ளார். எனவே இவர்கள் செய்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அரசு மீட்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில்,
கருணாநிதி எப்படி பொது சொத்தை 1967ம் ஆண்டே அபகரித்திருக்கிறார் என்கிற விவரத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இங்கே இந்த பிரச்சனை பேசப்பட்டது. அதை தாங்க முடியாமல் திமுகவினர் பேடித்தனமாக வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பழைய செட்டில்மெண்ட் பகுதிகளான சைதாப்பேட்டை, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர் பகுதிகளில் குப்பை கழிவுகளை அகற்ற அதற்காக நியமிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சென்று பணியாற்ற தனி “சந்துகள்" பராமரிக்கப்பட்டன. காலப் போக்கில் கழிவு நீரை அகற்றும் பணிகள் இயந்திரங்களாலும் பாதாள சாக்கடை மூலமாகவும் அகற்றும் வகையில் நவீனமயமாக்கப்பட்டதால் இந்த சந்துகள் பயன்பாடு இன்றி சென்னையில் பல இடங்களில் உள்ளன.
பயன்பாடற்ற இந்த துப்புரவு சந்துகளை சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. இதுவரை எந்த ஆய்வில் கோபாலபுரம் 4-வது தெரு, 5-வது தெருவுக்கு இடைப்பட்ட பகுதியில் 653 அடி நீளமும், 12 அடி அகலமும் உள்ள சந்தில் 4 ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதில் ஒரு ஆக்கிரமிப்பு சந்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டின் பின்புறம் 780 சதுர அடி நிலம் பாதுகாவலர் நிழல் கூடம் மற்றும் கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது.
1978ல் கருணாநிதி அந்த இடத்தை தனக்கு மறு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்திருத்தார். ஆனால் சென்னை மாநகராட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே உறுப்பினர் வெற்றிவேல் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கழிவு நீர் குழாயை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தை மாநகராட்சிக்கு எடுத்துக் கொள்ள கலெக்டரை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் 30-5-2003ல் நிறைவேற்றப்பட்டது. இதில் இறுதி நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த நிலம் கருணாநிதியின் பயன்பாட்டிலேயே இன்னும் இருந்து வருகிறது. எனவே இதுவரை துப்புரவு சந்துகளில் கண்டுபிடித்த ஆக்கிரமிப்புகளும், இனிமேல் கண்டுபிடிக்கும் ஆக்கிரமிப்புகள் அனைத்து மீதும் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications