கிருஷ்ணசாமி அறையில் திருட்டு எதிரொலி: எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறையில் திருட்டு போனதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பழைய, புதிய எம்.எல்.ஏ.க்கள் விடுதிகள் இருந்தன. கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டும்போது பழைய விடுதி இடிக்கப்பட்டது.
தற்போதுள்ள விடுதி ஏ, பி, சி, டி என்று 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 234 எம்.எல்.ஏ.க்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து மாத வாடகையாக ரூ. 250 வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து ரூ. 75 ஆயிரம் ரொக்கம் மற்றும் சூட்கேஸ் திருட்டுப் போனது. அவர் வாக்கிங் சென்றபோது இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் கண்காணிப்பு கோமராக்கள் பொருத்த வேண்டும் என்று சட்டப்பேரவை செயலகம் சார்பில் போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்று விரைவில் கண்காணிப்பு கேமரகாக்கள் பொருத்தப்படவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
புதிய தலைமையகத்தில் அரசு செயல்பட்டு வந்தபோது பாதுகாப்பு கருதி 3 வாயில் கதவுகள் பூட்டி வைக்கப்பட்டு அங்கு போலீசார் காவலுக்கு நின்றிருந்தனர். தற்போது தலைமைச் செயலகம் கோட்டைக்கே சென்றபிறகும் அந்த 3 வாயில் கதவுகள் பூட்டித் தான் கிடக்கின்றன. எனவே, அவற்றை திறந்து விடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் விடுதி அறைகளில் பெரும்பாலும் எம்.எல்.ஏ.க்களின் உறவினர்கள் தான் தங்குகின்றனர். அவ்வாறு யார், யாரெல்லாம் தங்குகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications