தமிழகத்தை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக்குவதே என் கனவு: முதல்வர் ஜெயலலிதா

இந்திய தொழில், வர்த்தக சபைகள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,
தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று நான் நம்புகிறேன். உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களை எதிர்கொண்டு அனைத்து தரப்பினரும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது.
12-வது நிதிக்குழு (2012-2017) 9 முதல் 9.5 சதவீத வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளது. தேசிய அளவிலான இந்த வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். நாட்டுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் இருக்க முடியும்.
இன்னும் 5 ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய முடியும் என்று நம்புகிறேன். முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே சமயம் இங்குள்ள பிரச்சனைகளை நான் ஒன்றும் குறைத்து மதிப்பிடவில்லை. தொழில்துறையினருக்கு கவலை அளிக்கக்கூடிய குறுகிய, நீண்ட கால பிரச்சனைகளைத் தீர்க்க அரசு முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாதது பொருளாதார வளர்ச்சி்க்கு முட்டுகட்டையாக உள்ளது. எனவே, இந்த துறைகளில் அதிக முதலீடு தேவை. சாலை, மின்சாரம் போன்ற வசதிகளை மேம்படுத்த அரசு-தனியார் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு வாரியம் என்ற அமைப்பும் எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக்குவதே எனது கனவு. அதற்குத் தேவையான வழிமுறைகள் விரைவில் வெளியாகவிருக்கும் 2025 தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிடப்படும். தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனை விரைவில் தீரும். மாறாக தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறும். அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 23, 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் வெளியிடப்படவிருக்கும் 2011-ம் ஆண்டுக்கான புதிய தொழில் கொள்கையில் ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் சார்ந்த கொள்கைகள் இடம்பெறும்.
விவசாயப் பொருட்கள், மருந்து உற்பத்தி, ஜவுளித் துறை, தோல் பொருள்கள் போன்றவற்றில் புதிய முதலீடுகளை கொண்டுவர எனது அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தை சிறந்த மாநிலமாக்க நீங்களும் எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில், வர்த்தக சபைகள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) தலைவர் ஹர்ஷ் மரிவாலா, மூத்த துணை தலைவர் ஆர்.வி. கனோரியா, துணை தலைவர் நைனா லால், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications