வீரபாண்டி ஆறுமுகத்தை வெளியே வரவிட்டு சிறை வாசலில் மீண்டும் கைது செய்த போலீஸ்!

வீரபாண்டி ஆறுமுகம் மீது ஏற்கனவே சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, சேலம் 5 ரோடு பிரிமியர் மில் நில அபரிப்பு வழக்கு, சேலம் தாசநாய்க்கன்பட்டி நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் மீது 4வதாக இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கோவை ஜூவல்லரி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக இந்த புதிய வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இருந்து பிடிவாரண்டு பெறப்பட்டு, சேலம் நீதிமன்றத்தில் தரப்படும். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதற்கான உத்தரவை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சேலம் போலீசார் தருவார்கள். இதனால் வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாக முடியாது என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. பழைய வழக்கில் அவர் சிறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சிறை வாசலிலேயே வைத்து புதிய வழக்கில் வீரபாண்டியை கைது செய்வதாகக் கூறி சேலம் போலீசார் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக வீரபாண்டி ஆறுமுகத்தை வரவேற்க பெரும் திரளான தொண்டர்கள் சிறையின் மெயின் வாசலில் காத்திருந்தனர். ஆனால் தொண்டர்களுக்குத் தெரியாமல் 3வது வாசல் வழியாக வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸார் அழைத்துச் சென்று விட்டனர்.
கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் சேலம் கொண்டு செல்லப்படுகிறார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications