வாக்களிக்கவோ, கேள்வி கேட்கவோ லஞ்சம் கேட்கும் எம்.பிக்களை தூக்கில் போடுங்கள்- அன்னா ஹஸாரே
ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள், நம்பிக்கை வாக்கெடுப்புகள் போன்றவற்றின் மீது வாக்களிக்கவோ அல்லது மக்கள் பிரச்சினை தொடர்பாக கேள்வி கேட்கவோ லஞ்சம் கேட்கும் எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தூக்கில் போட வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹஸாரே ஆவேசமாக கூறியுள்ளார்.
எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று அமர்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அன்னா ஹஸாரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நடந்த கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹஸாரே அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் கேள்வி கேட்கவும் வாக்களிக்கவும் லஞ்சம் பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை இப்படிப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும்.
ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தைக் கொண்டுவந்தால், இவர்களைப் போன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க முடியும்.
எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேர்மையாக விசாரணை நடத்தினால், நமது அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகள் தெரியவரும் என்றார் ஹஸாரே.












Click it and Unblock the Notifications