நான் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக கூறும் அமைச்சரே, உங்கள் முதல்வரின் கதை என்ன?- கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் அண்ணா அறிவாலயத்திலும், கோபாலபுரத்திலும் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக கூறும் அமைச்சரே, உங்கள் முதல்வரின் கதை என்ன என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

தமிழக அரசின் வீட்டு வசதித் துறை சார்பில் 5-8-1988ல் அதாவது கவர்னர் ஆட்சிக் காலத்திலேயே அரசாணை எண் 1100 பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையில், தி.மு.க. அறக்கட்டளைக்கு அலுவலகம், திருமண மண்டபம், மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்கு பின்வரும் நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. மொத்த நிலத்தில் பத்து சதவீதமான 1890 சதுர மீட்டர் நிலத்தினை திறந்தவெளி நிலமாக பொது மக்களுக்கான பொழுது போக்குப் பூங்காவாக தி.மு.க. அறக்கட்டளையே பராமரிக்க வேண்டும். மேற்படி பத்து சதவீத இடத்தில் எந்தவிதக் கட்டிடங்களும் கட்டப்படக் கூடாது. இதுதான் அரசாணையில் விதிக்கப்பட்ட நிபந்தனை.

இந்த ஆணையின்படி தி.மு.க. அறக்கட்டளையினால் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அறக்கட்டளை அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, மாநகராட்சிக்குத் தரப்பட்ட இடத்திற்குப் பதிலாக அண்ணா அறிவாலயத்தின் முகப்பிலே அதே அளவிற்கான இடத்தை ஒதுக்கித் தர விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டுமென்றும் கேட்டு, அந்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 8-1-1998ல் அனுமதியும் கொடுத்தது.

ஆனால் 2001ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, 28-6-2004 தேதி கடிதத்தில் தி.மு.கழக அறக்கட்டளையினால் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்த இடத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், ஏற்கனவே ஒதுக்கித் தந்த இடத்தைத் தான் தர வேண்டுமென்றும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கேட்டு எழுதியது.

அரசின் இந்தக் கடிதத்திற்கு தி.மு. கழக அறக்கட்டளை சார்பில் மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குப் பதிலாக எந்தக் காரணத்தினால் மாற்று இடம் தர வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதையெல்லாம் விளக்கி அரசுக்கு 4-7-2004ல் ஒரு கடிதமும் 3-8-2004ல் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் இந்தப் பிரச்சினை தொடர்பாக வழக்கொன்றும் தொடரப்பட்டது. அதில் நீதியரசர், நான்கு வார காலத்திற்கு எதுவும் செய்யக் கூடாது என்றும், அறக்கட்டளையின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு தாங்கள் ஆட்சியிலிருந்து வெளியேறிய மே 2006 வரை நீதிபதி கூறியதற்கொப்ப எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. பிரச்சினையை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதன் பிறகு சென்னை மாநகர் வளர்ச்சிக் குழுமமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து குறிப்பிட்ட இடத்தை நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் 7-12-2007ல் அரசின் சார்பில் இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஆணையில், இந்தப் பிரச்சினையில் மேல் நடவடிக்கையைக் கைவிடுவதென்றும், விளக்கம் கேட்டு அ.தி.மு.க. அரசு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும், மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளாமல் திறந்தவெளியாகவே பராமரித்திட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுதான் அண்ணா அறிவாலயத்தில் சென்னை மாநகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பற்றிய முழு விவரமாகும். அ.தி.மு.க. உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேசும்போது ஏதாவது குறை சொல்ல வேண்டுமென்பதற்காக இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் சொல்கிறார்களே?

என் வீட்டிற்குப் பின்னால் உள்ள ஓர் சிறு இடத்தைப் பற்றி திரும்பத் திரும்ப அதைப் பற்றிய விளக்கத்தை நான் கொடுத்திருந்த போதிலும் நேற்றையதினம் பேரவையில் ஒரு அமைச்சர் புகார் கூறியிருக்கிறார்.

அ,தி.மு.க. உறுப்பினர் ஒருவர் அதற்காக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அதை அவையிலே எழுப்ப பேரவைத் தலைவர் அவசர அவசரமாக அனுமதி கொடுத்துள்ளார். அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் சென்னை மாநகராட்சியில் அரசுக்குச் சொந்தமான கால்வாய் புறம்போக்கு போன்ற அரசு நிலங்களில் அதிகார வர்க்கத்திலிருந்த சிலர் வீடு மற்றும் நிலையான கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.

அந்தச் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் மற்ற யாரைப் பற்றியும் பேசாமல் என்னுடைய வீட்டிற்குப் பின்னால் உள்ள ஒரு கால்வாய் புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் 13 அடிகள் மட்டுமே அகலம் கொண்ட ஒரு சிறு இடத்தைப் பற்றி அவையிலே நீண்ட விவாதம் நடைபெற்றுள்ளது.

உறுப்பினர் அவையிலே பேசும்போது, 1967ல் கருணாநிதிக்கு அவர் வீட்டிற்குப் பின்னால் இருக்கிற 60க்கு 13 என்ற இடம் தேவைப்படுகிறது. அது கால்வாய் இடம். அந்த இடத்தை அவருக்கு விலைக்குக் கொடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டு அனுப்புங்கள் என்று மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு கடிதம் அனுப்புகிறார். உடனே சென்னை மாநகராட்சியும் அந்த இடத்தில் ரூ. 3,250 என்று அந்தக் காலத்தில் விலையை நிர்ணயம் செய்கிறது. கருணாநிதிக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அவருக்குக் கொடுக்கும்போதே அந்த நிலம் கால்வாய்ப் பகுதி என்றும், மாநகராட்சி ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கே வந்து அந்தக் கால்வாய்ப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன் அந்த இடம் அவருக்குக் கொடுக்கப் பட்டது என்று இதையெல்லாம் குற்றச்சாட்டாகக் கூறுகிறார். இது குற்றச்சாட்டா? நிலை விளக்கமா?

அ.தி.மு.க. உறுப்பினர் பேசியதாக அவர்களுடைய கட்சி ஏட்டிலே இதுதான் வந்துள்ளது. இந்த இடத்தைத்தான் நான் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, நான் வசிப்பதற்காக அரசு ஒதுக்கிய கொடநாடு மாளிகை போன்ற பெரிய பெரிய வீடுகளுக்கெல்லாம் செல்லாமல், ஏற்கனவே நான் வாழ்ந்த சிறிய தெரு வீட்டிலேயே தங்கிய காரணத்தால், பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான அந்த இடத்தில் ஓய்வு நேரத்தில் உட்கார்ந்திருப்பதற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதைத்தான் நான் ஏதோ திட்டமிட்டு ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அந்த இடத்திலே கட்டிடம் கட்டியிருப்பதாகவும் பேரவையிலே பேசியிருக்கிறார்கள். பேரவை உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் அல்லது இப்போதே கூட நேரில் வந்து அந்த இடத்தைப் பேரவைத் தலைவர் தலைமையிலே காணலாம். நான் என்னுடைய சொந்த வீட்டையே நான் வாழும் காலத்திற்குப் பிறகு என் குடும்பத்திற்கு வேண்டாமென்று கூறி அதனை அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். ஆனால் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை நான் ஆக்கிரமித்துக் கொண்டதாக அ.தி.மு.க. வினர் குற்றம் கூறி, அதற்குரிய அமைச்சர் பேரவையிலே பதில் சொல்லியிருக்கிறார்.

மேலும் அந்தத் துறைக்கான அமைச்சர் தனது பதில் உரையில், சென்னை மாநகராட்சியின் பழைய செட்டில்மெண்ட் பகுதிகளான சைதாப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மற்றும் தியாகராயர்நகர் போன்ற பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக அதற்கென நியமிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் சென்று பணியாற்ற தனி சந்துகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

காலப் போக்கில் திடக் கழிவு மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் இயந்திரங்களாலும் மற்றும் பாதாள சாக்கடை மூலமாகவும் அகற்றப்படும் வகையில் நவீனமயமாக்கப்பட்டதால் இச்சந்துகள் பயன்பாடின்றி சென்னை மாநகரின் பல்வேறு மண்டலங்களிலும் உள்ளன என்றுதான் தொடங்குகிறார். இதிலிருந்தே அது சந்து என்பதும், எதற்காகப் பயன்பட்டது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் தனது பதிலில் இது போன்ற சந்துகள் கோபாலபுரத்தில் இருக்கின்றன என்றும்; அதிலே ஒன்றுதான் என்னுடைய வீட்டின் பின்புறத்திலே உள்ளது என்றும் கூறியிருக்கிறார். கோபாலபுரத்தில் என் வீட்டிற்குப் பின்னால் உள்ள அந்தச் சந்து போன்ற பகுதிகளையெல்லாம் அந்தத் தெருவிலே உள்ள அனைவருமேதான் பராமரித்து வருகிறார்கள்.

என் மீது குற்றஞ்சாட்டிய அந்த அ.தி.மு.க. உறுப்பினரையும், அமைச்சரையும் கேட்கிறேன். உங்கள் முதல்வரின் கதை என்ன? அதைப்பற்றி உங்கள் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஊர்வலமாக தலைமைச் செயலகத்திற்கே வந்து சிறுதாவூரில் தலித்களுக்காக கொடுக்கப்பட்ட இடத்தை ஜெயலலிதாவும் அவருக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று புகார் மனு கொடுத்தார்களா, இல்லையா?

அதன் மீது விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நீதியரசர் சிவசுப்ரமணியம் கமிஷன் அவ்வாறு ஆக்கிரமிப்பு நடந்தது உண்மை என்று அறிக்கை கொடுத்ததா, இல்லையா? கொடநாடு விவகாரம் என்ன? சிறுதாவூரில் ஜெயலலிதாவிற்கு மிகவும் வேண்டப்பட்டவர் பெயரிலே உள்ள மாளிகை, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை வளைத்து ஆக்கிரமித்துச் சுற்றுச் சுவர் எழுப்பி கட்டப்பட்டிருக்கிறதா இல்லையா? அந்த இடங்களையெல்லாம் அந்தத் துறையின் அமைச்சர் எப்போது கைப்பற்றப் போகிறார்? பேரவையில் பதில் சொல்வாரா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+