வேலூர் சிறைக்கு நளினி திடீர் மாற்றம்-கணவருடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் நளினியின் தண்டனை, அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடைய பரிந்துரையின் பேரில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நளினி. சில மாதங்களுக்கு முன்பு அவர் பாதுகாப்பு கருதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் முருகன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களைத் தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நளினி, தனது கணவரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். இதனை சிறை துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து அரசின் கருத்தை சிறை அதிகாரிகள் கோரியிருந்தனர். அரசும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து இன்று புழல் சிறையில் இருந்து நளினி வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். காலை 8 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகளிர் சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
சிறிது காலம் நளினி வேலூர் சிறையில் இருப்பார் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சிறைத் துறை டி.ஜி.பி. டோக்ரா கூறுகையில், நளினியின் விருப்பத்துக்கு இணங்க, சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு நளினி முருகனை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்படும் என்றார்.
முதலில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 15 நாட்களுக்கு ஒருமுறை முருகனை சந்தித்து பேச நளினுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்ததும் நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications